விஜய் போல அற்ப அரசியல் செய்யவில்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி!
தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து விமர்சித்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர் மன்றத்தினர் அவருக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் விலகல் குறித்துத் தெரிவித்த விமர்சனத்திற்கு, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் அல்ல; அவர் எடுத்த முடிவு மக்களின் நலனுக்கானது" என வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என். இரவி ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தின் சிஸ்டத்தை மாற்ற நினைத்த ரஜினிகாந்த்தை திமுக குடும்பம் மிரட்டியது. அந்த மிரட்டலுக்குப் பயந்தே அவர் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், அந்த மிரட்டல்களையும் தாண்டி அரசியலுக்கு வரும் மனவலிமை தலைவர் விஜய்-யிடம் மட்டுமே இருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்தை மறுத்துள்ள சோளிங்கர் இரவி, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய காலத்தில், லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டால் அவர்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தைக் கருத்தில் கொண்டு, உயிர் இழப்புகளைத் தவிர்க்கவே ரஜினி அரசியலில் இருந்து விலகினார். இது மிரட்டலுக்கு அஞ்சி எடுத்த முடிவல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரூர் வன்முறை வழக்கு! மார்ச் 15-ல் சிபிஐ முன் ஆஜராகிறார் தவெக தலைவர் விஜய்!
தனது பலத்தை நிரூபிக்கத் தன்னை நம்பி வரும் உயிர்களைப் பலியிடும் 'அற்ப அரசியலை' ரஜினிகாந்த் ஒருபோதும் செய்யவில்லை என்றும், விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தே மக்களின் நலனுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார் என்றும் இரவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது; மக்களின் உயிருக்கு மதிப்பளிக்கும் மனவலிமை கொண்ட ரஜினிகாந்த்தான் நிரந்தரத் தலைவர் எனக் கூறி, #பிழைக்கவும்_ரஜினி #பழிக்கவும்_ரஜினி என்ற வாசகங்களுடன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக மற்றும் ரஜினி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ள இந்தப் போர், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் இன்று திமுக-வின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் நடித்து வருவதைச் சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜுனா பேசியது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!