"உண்ணாவிரதத்தை கைவிட தயார்! ஆனா.. மத்திய அரசுக்கு சோனம் வாங்சு விதித்த நிபந்தனைகள்!
உண்ணாவிரதத்தை இன்றே கைவிட தயார் ஆனால் என நிபந்தனைகளுடன் கூடிய கடிதத்தை சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல சமூக ஆர்வலரும் சிஜேபி (CJP) அமைப்பின் மூத்த தலைவருமான சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசுக்கு அதிரடியாக 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார்.
டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) இளைஞர்களுடன் இணைந்து நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி சோனம் வாங்சுக் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். டெல்லி காவல்துறையின் தடியடி மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த அவரது உடல்நிலை நலிவடைந்ததால், அவர் தற்பொழுது டெல்லி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் மத்திய அரசுக்கு நிபந்தனைகளுடன் கூடிய முக்கியக் கடிதம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், "நான் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றே கைவிடத் தயாராக உள்ளேன், ஆனால் அதற்கு அரசு பின்வரும் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "அடக்குமுறையால் இளைஞர்களின் குரலை ஒடுக்க முடியாது!" டெல்லியில் CJP மீதான தடியடிக்கு திமுக கண்டனம்!
சோனம் வாங்சுக் விதித்துள்ள 3 முக்கிய நிபந்தனைகள், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துள்ள நீட் வினாத்தாள் கசிவு (NEET Paper Leak) மற்றும் தேர்வு முறைகேடு போன்ற ஒட்டுமொத்த விவகாரங்களுக்கும் மத்திய அரசு முழுமையான பொறுப்பேற்க வேண்டும்.
மனுக்களைப் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் தட்டிக்கழிக்கக் கூடாது. எனக்கும், எனது சிஜேபி கட்சியின் முக்கியத் தலைமைப் பொறுப்பாளர்களுக்கும் டெல்லி நாடாளுமன்றத்தின் (Parliament) நுழைவாயில் வரை நேரடியாகச் சென்று, எங்களது கல்விச் சீர்திருத்தக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க முழுமையான பாதுகாப்புடன் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
தற்பொழுது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நான் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக்கே நேரில் வர வேண்டும். மாணவர்களின் நலன் சார்ந்த இந்தக் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த கோரிக்கைகளை நாடாளுமன்ற அவையில் உரக்க எழுப்புவோம் என்று அவர்கள் என் முன்னிலையில் உறுதியளிக்க வேண்டும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், மாணவர்களின் கல்வி உரிமைக்காகத் தனது போராட்டக் குணத்தை வீரியமாக வெளிப்படுத்தி வரும் சோனம் வாங்சுக்கின் இந்த நிபந்தனைக் கடிதம், டெல்லி அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மத்திய அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிபந்தனைகளுக்கு எப்படிப் பதிலளிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு! நாடாளுமன்ற நுழைவாயில்கள் அதிரடியாக மூடல்!