×
 

"கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் பேரணியாகச் சென்றனர்.

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில், அவர்களின் நீண்டகால கோரிக்கை மீண்டும் வெடித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவில் ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை காவல்துறை வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டுவந்து நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களை கைது செய்த நிகழ்வுக்கு நினைவுகூறும் வகையில் இன்று பேரணி நடைபெற்றது.

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பித்த இந்தப் போராட்டம், பணி நிரந்தரம், உரிய ஊதியம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து நீடித்து வந்தது. கைது நடவடிக்கைக்குப் பிறகும் போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தது. சாலை மறியல், ஆற்றில் இறங்கி போராட்டம், பசியுடன் அமர்ந்திருத்தல் என பல வழிகளில் தங்கள் குரலை எழுப்பி வந்தனர்.

பல மாதங்கள் நீடித்த இந்தப் போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கின.இன்று ஓராண்டு நிறைவில் எழும்பூரில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வழியாக பேரணி சென்றனர். பதாகைகள் ஏந்தியபடி, கோஷங்கள் எழுப்பியபடி தூய்மைப் பணியாளர்கள் அணிவகுத்துச் சென்றனர். “பணி நிரந்தரம் வேண்டும்”, “தனியார்மயத்தை கைவிடு”, “ஊதிய உயர்வு வழங்கு”, “குப்பைகளை அகற்ற இயந்திரங்கள் பயன்படுத்து”, “கூலித் திருட்டை தடு” என்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். பெரும்பாலும் பெண்களாக இருக்கும் இந்தப் பணியாளர்கள் பலரும் குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டும் வெடித்தது போராட்டம்..! களமிறங்கிய தூய்மை பணியாளர்கள்..! ரிப்பன் மாளிகை நோக்கி ஊர்வலம்..!!

அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் குழந்தைகளின் கல்வி, அன்றாட உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் பாதிக்கப்பட்டன என்பதை அவர்கள் பேரணியின் போது சுட்டிக்காட்டினர்.பேரணி அமைதியாக நடைபெற்றது. காவல்துறையினர் பேரணிப் பாதையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தூய்மைப் பணியாளர்களின் இந்தப் போராட்டம் நகரின் தூய்மைப் பணிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டியது. நகரத்தை சுத்தமாக வைத்திருக்கும் இந்தப் பணியாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 

 

இதையும் படிங்க: "சொத்துவரி மதிப்பீடு".! 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்.! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share