அம்மா இருந்தவரை எல்லாம் வாலை சுருட்டிட்டு இருந்துச்சு! மன்னார்குடியில் சசிகலா அதிரடி!
நான் பெங்களூர் போனதுல ரொம்ப குளிர் விட்டு போச்சு எல்லாருக்கும் மன்னார்குடி பரப்புரையில் சசிகலா பேச்சு.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், தனது சொந்த ஊரான மன்னார்குடியில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட சசிகலா, தற்போதைய அதிமுக தலைமை மற்றும் அரசியல் எதிரிகளை நோக்கி அனல் பறக்கும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தையும், தற்போதைய சூழலையும் ஒப்பிட்டுப் பேசிய சசிகலா அம்மா உயிரோடு இருந்தவரை இங்கிருந்தவர்கள் எல்லாம் பயந்துபோய் வாலைச் சுருட்டிக்கொண்டுதான் இருந்தார்கள். அதிகாரத்தில் இருந்தவர்கள் அம்மாவின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கித் தங்களது வரம்புகளை மீறாமல் இருந்தார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
தனது சிறைவாசத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், தான் இல்லாத காலத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் துரோகங்கள் முளைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். அம்மா மறைந்த பிறகும் நான் இங்குத் தங்கியிருந்திருந்தால், இப்போதும் நிலைமை அம்மாவின் காலத்தைப் போலவே கட்டுக்கோப்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால், நான் பெங்களூரு சிறைக்குச் சென்ற பிறகு, இங்குள்ளவர்களுக்குப் பயம் போய்விட்டது; எல்லாருக்கும் ரொம்பவே குளிர் விட்டுப் போய்விட்டது எனத் தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக முழங்கினார்.
இதையும் படிங்க: பச்சோந்திக்கே டஃப் கொடுக்கும் பழனிசாமி! வேலூர் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
அதிமுகவின் தற்போதைய நிலை குறித்தும், கட்சியை மீட்கத் தான் எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் பேசிய அவர், அம்மாவின் உண்மையான விசுவாசிகள் தன்னோடுதான் இருக்கிறார்கள் என்று கூறினார். தங்களுக்கு அதிகாரம் கொடுத்தவருக்கே துரோகம் செய்தவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
தனது சொந்த மண்ணில் மக்கள் அளிக்கும் வரவேற்பு, தான் மீண்டும் அரசியலில் ஒரு பெரிய சக்தியாக உருவெடுப்பதற்கான அச்சாரமாகத் தெரிவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: ஏப்ரல் 16 முதல் தொடக்கம் என அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!