சிபிஐ விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது! மின்மாற்றி விவகாரத்தில் செந்தில் பாலாஜி அதிரடி!
மின்மாற்றி கொள்முதல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், இதில் ஒரு பைசா கூட ஊழல் நடக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்மாற்றி (Transformer) கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று விரிவான விளக்கமளித்தார். இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதனை ஒரு நெருக்கடியாகத் தாம் கருதவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, "இந்த வழக்கின் முழுமையான உத்தரவு இன்னும் வெளியாகவில்லை; அதன் கடைசிப் பகுதி மட்டுமே வாசிக்கப்பட்டுள்ளது. 2021-க்குப் பிறகு நடந்த நிகழ்வுகளைத் திட்டமிட்டு மறைத்து, ஒரு குறிப்பிட்ட அமைப்பு சுயமாகச் செயல்படாமல் அரசியல் நோக்கத்திற்காக இந்த வழக்கை முன்னெடுத்துள்ளது. மக்கள் மன்றத்தில் எங்களை வீழ்த்த முடியாதவர்கள், இதுபோன்ற அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். வழக்குத் தொடரப்பட்டாலே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது," என்று குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்துத் தேவையான மேல்முறையீட்டு நடவடிக்கைகளைப் பரிசீலிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார்களுக்குப் பதிலளித்த அவர், டெண்டர் நடைமுறைகள் குறித்துத் தொழில்நுட்ப ரீதியான விளக்கங்களை அளித்தார். 1987-ஆம் ஆண்டு முதல் மின்சார வாரியத்தில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவோ, அவைதான் தற்போதும் தொடர்கின்றன. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: "தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்!" - அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை!
டெண்டரில் பல நிறுவனங்கள் பங்கேற்று ஒரே விலையை (L1 - Lowest Price) குறிப்பிடுவது வழக்கமானதுதான். அந்த L1 விலையை ஏற்றுக்கொண்ட பிற நிறுவனங்களுக்கும் ஒப்பந்தத்தைப் பிரித்து வழங்குவது டான்ஜெட்கோவின் (TANGEDCO) நீண்டகால நடைமுறை.
ஒரு டெண்டரை இறுதி செய்வதற்கு முன்பாக மூன்று வெவ்வேறு குழுக்கள் அதனை ஆய்வு செய்கின்றன. இதில் தனி நபர் தலையீட்டிற்கு இடமில்லை. இதனால் அரசுக்கோ அல்லது மின்சார வாரியத்திற்கோ ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு குறித்துப் பேசிய அவர், சில வாக்குச்சாவடிகளில் தேவையில்லாத சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்ற நோக்கிலேயே தாம் வாக்களிக்கச் செல்லவில்லை என விளக்கமளித்தார். எக்ஸிட் போல் முடிவுகள் குறித்துக் கவலைப்படவில்லை என்றும், மேற்கு மண்டலத்தில் உள்ள 35 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் பதவியேற்பது உறுதி என்றும் அவர் கோவையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது உறுதிபடக் கூறினார்.
இதையும் படிங்க: "பதற்றம் வேண்டாம்.. தாராளமாக கிடைக்கும்": எரிபொருள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு!