வசனம் பேசலாம்.. ஆனால் வாக்கு விழாது! விஜய் மற்றும் தவெக-வை விமர்சித்த வானதி சீனிவாசன்!
கோயம்புத்தூரில் இன்று நடைபெற்ற ஆன்மீக நிகழ்வில் பங்கேற்ற பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுக அரசு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
திருப்புரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கோவில்களில் பிரார்த்தனை நடைபெற்றது. கோவை கடலைக்கார தெருவில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்வில் பங்கேற்ற பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக அரசைத் தரக்குறைவாகச் சாடினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திமுக-வை விமர்சிப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "விஜய் புதுப்புது வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசலாம், மேடை ஏறலாம், அடுக்கு மொழியில் வசனம் பேசலாம், கூட்டத்தையும் கூட்டிக் காட்டலாம். ஆனால், தேர்தல் என்று வரும்போது வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) தான் விழும். ஏனென்றால், திமுக-வை வீழ்த்தக்கூடிய உண்மையான சக்தி எங்களிடம் மட்டுமே உள்ளது" என அதிரடியாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்திற்கு முழு ஒப்புதல்! கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவிப்பு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் கூறி திமுக அரசு தீபம் ஏற்றத் தடுத்து வருகிறது. தமிழர்களின் அடையாளமான கோவில் கோபுரங்களையும், கலாச்சாரத்தையும் அழிக்கத் திராவிட மாடல் அரசு முயல்கிறது. இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது திமுக-வின் இரத்தத்திலேயே ஊறிய ஒன்று" எனச் சாடினார்.
கூட்டணி குறித்த முதலமைச்சரின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், ஊழல்வாதிகளைப் பற்றிப் பேச முதலமைச்சருக்கு எந்த அருகதையும் இல்லை. அவரது அமைச்சரவை சகா கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு எத்தனை நாட்களாகிறது? ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர் பேசுவது நகைப்புக்குரியது என்றார்.
தமிழகம் எப்போதும் ஆன்மீக பூமி என்றும், அரசியல் சக்திகளால் மக்களின் நம்பிக்கையைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் குறிப்பிட்ட அவர், திமுக அரசுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொண்டதாகக் கூறினார்.
திமுக மற்றும் தவெக என இருமுனைத் தாக்குதலை பாஜக கையில் எடுத்துள்ள நிலையில், வானதி சீனிவாசனின் இந்த 'வசனம்' மற்றும் 'வாக்கு' குறித்த பேச்சு தவெக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார் ஸ்டாலின்! கோவையில் வானதி சீனிவாசன் ஆவேசம்!