×
 

தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

தலைமைத்துவம் குறித்து கருத்து கூறிய நடிகர் விஜய் சேதுபதியை தவெகவினர் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தலைமைத்துவம் குறித்துப் பொதுவான கருத்து தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதியை, முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகத் தவறாகப் புரிந்துகொண்டு தவெகவினர் மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது அப்பட்டமான பாசிசம் என்றும், 'ஜனநாயகன்' என்று வெறும் படம் எடுத்தால் மட்டும் போதாது, உண்மையான ஜனநாயக மாண்புகளைக் காப்பாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மிகக் காரசாரமாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் விஜய் சேதுபதி, போட்டியாளர்களிடையே நடந்த விளையாட்டுக் களம் குறித்துப் பேசும்போது தலைமைத்துவம், பொறுப்புணர்வு மற்றும் அதிகாரம் குறித்துப் பொதுவான சில கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். 

இதனைத் தமிழ்நாடு முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜயைக் குறிவைத்து மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களிலும் நேரடிக் களத்திலும் தவெகவினர் மற்றும் அமைச்சர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

இந்த விவகாரம் தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் கொதித்தெழுந்த சீமான், அன்புத்தம்பி விஜய் சேதுபதி எந்தவொரு தனிநபர் பெயரையோ அல்லது அரசியல் கட்சியையோ வெளிப்படையாகச் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான களச்சூழலை வைத்துத் தலைமைத்துவம் குறித்த தனது இயல்பான பார்வையை வெளிப்படுத்தினார். 

அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு வலிந்து பொருத்திப் பார்த்து, கருத்து சொன்ன கலைஞரையே தாக்க முற்படுவது ஏன்? மற்ற எந்தக் கட்சிக்கும் எழாத ஆத்திரம் அமைச்சர் தொடங்கி சாதாரணத் தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் கொப்பளிப்பது ஏன்? தலைமைத்துவம் குறித்த ஒரு பொதுவான கருத்தே தங்களை இவ்வளவு தூரம் ஆத்திரப்படுத்துகிறது என்றால், ஜனநாயகக் களத்தில் நாளையும் மறுநாளும் எழும் நேரடி மக்கள் விமர்சனங்களை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும் தவெகவின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்த அவர், இதுதான் நீங்கள் மேடைகளில் முழங்கும் மாற்று அரசியலா? இதுதான் உங்களது அரசியல் நாகரிகமும் பண்பாடா? இவ்வளவுதானா உங்கள் சகிப்புத்தன்மை? அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் தங்களது கருத்துகளைத் துணிவோடு பேசும் உரிமை அரசமைப்புச் சட்டத்தில் உண்டு. அந்தக் கருத்து பிடிக்காவிட்டால் எதிர்வாதம் செய்து கருத்தால் மோத வேண்டும்.

அதை விடுத்துக் கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும் அச்சுறுத்துவதும் ஆரோக்கியமான அரசியல் பண்பல்ல. அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டை மட்டும் எதிர்பார்க்க முடியாது; விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேச வேண்டும் என நினைப்பது சர்வாதிகாரமே தவிர ஜனநாயகமல்ல. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள், வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்கப் பார்க்காதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: "துக்ளக் தர்பார்"..! பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்..! சவால்விட்ட சீமான்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share