தவெக வேட்பாளர்கள் இருவர் மாற்றம்! நேயம் மக்கள் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் நேயம் மக்கள் கழகம் போட்டி 2 தவெக வேட்பாளர்கள் நீக்கப்பட்டு அந்த தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது வேட்பாளர் பட்டியலில் கடைசி நேரத்தில் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரு தொகுதிகளின் வேட்பாளர்களை நீக்கிவிட்டு, கூட்டணிக் கட்சியான நேயம் மக்கள் கழகத்திற்கு (NMK) அந்த இடங்களை ஒதுக்கியுள்ளார் கட்சித் தலைவர் விஜய்.
நேற்று வெளியிடப்பட்ட தவெக-வின் 30 தொகுதிகள் கொண்ட பட்டியலில் இருந்த இரு வேட்பாளர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளனர். உருளையன்பேட்டை: திரு. S. மரிய பிரான்சிஸ் (தவெக) நீக்கப்பட்டு, அங்கு நேயம் மக்கள் கழகத்தின் தலைவர் நேரு (எ) குப்புசாமி போட்டியிடுகிறார். தட்டாஞ்சாவடி: திரு. M. பன்னீர் செல்வம் (தவெக) நீக்கப்பட்டு, அங்கு நேயம் மக்கள் கழகத்தின் சார்பில் விநாயகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் தவெக தனித்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையிலான 'நேயம் மக்கள் கழகத்துடன்' தவெக அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் நேயம் மக்கள் கழக வேட்பாளர்கள் தவெக-வின் விசில் சின்னத்தில் போட்டியிடுவார்களா அல்லது தனிச் சின்னத்திலா என்பது குறித்த தெளிவான விபரம் விரைவில் வெளியாகும்.
இதையும் படிங்க: புதுச்சேரி தொகுதி பங்கீடு நிறைவு! காங்கிரஸ் 16, திமுக 12 இடங்களில் போட்டி!
வேட்புமனுத் தாக்கலுக்குச் சில மணி நேரங்களே இருந்த நிலையில், கூட்டணியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உருளையன்பேட்டை தொகுதியில் நேரு அவர்களுக்கு வலுவான செல்வாக்கு இருப்பதால், அங்கு வெற்றி வாய்ப்பை உறுதி செய்யத் தவெக இந்த விட்டுக் கொடுப்பைச் செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: புதுச்சேரி தேர்தல் 2026: 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்! தனித்து களம் காணும் தவெக!