×
 

ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.56.72 கோடி... 100% மானியத்துடன் புதிய வேளாண் திட்டம் அறிவிப்பு!

இந்த அறிவிப்பு, நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வேளாண் பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித்தொகைத் திட்டத்துக்கு ரூ.56.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் அறிவித்துள்ளார்.

2026–27ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய அவர், இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் மானியங்களும், முழு மானியத்தில் நீராதார வசதிகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர் கூறுகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் அரசு வேளாண் திட்டங்களின் பலன்களை எளிதாகப் பெறவும், பாசன வசதிகளை மேம்படுத்தி உற்பத்தியை உயர்த்தவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். குறிப்பாக, உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையால் ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், அவர்களுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

இதன்படி, மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், பண்ணை இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் வாங்குவதற்கு 70 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். மேலும், சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு 80 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், பாசன வசதி இல்லாத 300 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில் ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைத்து, அதனுடன் மின்மோட்டார் அல்லது சூரிய சக்தியில் இயங்கும் பம்புகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் பட்ஜெட்டில் இதனுடன், தளிர் கீரைகள் திட்டத்திற்கு ரூ.1.20 கோடி, பயிர் உற்பத்தி அதிகரிப்பு திட்டத்திற்கு ரூ.41 கோடி, தென்னை விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களுக்கு பல கோடி ரூபாய், பயறு மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களின் தன்னிறைவு திட்டத்திற்கு ரூ.203.64 கோடி, வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ.22 கோடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தில் சமூகநீதி மற்றும் சமமான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித்தொகைத் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்... எந்த பயிருக்கு எவ்வளவு நிதி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share