×
 

பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாத தவெக அரசைக் கண்டித்து, வரும் இடைத்தேர்தலில் தவெகவிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோம் எனத் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களில் பெறப்பட்ட பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய தவெக அரசுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் நோக்கில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் களமிறங்கி தீவிரப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் என்று அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலின் போது தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்றால் தமிழகத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீதக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு அந்தக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் அரசு புறக்கணித்திருப்பது தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சியின் காரணமாகப் பயிர் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளும் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற பயிர்க் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இருப்பினும் அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றத் தவறிவிட்டதால், அதற்குப் பாடம் புகட்டும் வகையில் அடுத்த மாதம் இடைத்தேர்தல் சந்திக்கவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெகவை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் என விவசாயிகள் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "என் நெஞ்சில் குடியிருக்கும்"..! தவெகவுக்கு தனிப் பெரும் அங்கீகாரம்... முதல்வர் விஜய் பெருமிதம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share