எதிர்பார்ப்போடு வந்த தவெக ஆட்சி எதிர்ப்போடு கிளம்பியிருக்கிறது..!! தமிழிசை விளாசல்..!!
மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த இந்த ஆட்சி எதிர்ப்போடு கிளம்பி இருக்கிறது, இதில் முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் சிறப்பு முகாமை டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், உதவிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. முகாம் தொடக்கத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, “கை கூப்பி நன்றி சொல்வதைவிட, மக்களை கைத்தூக்கி விடும் வகையில் செயல்பட வேண்டும் என மத்திய அரசு அதிகாரிகளுடன் பேசி இந்த முகாமை நடத்துகிறோம். வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்கள் உள்ளிட்ட அனைத்து மயிலாப்பூர் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நோக்கில் இந்த முயற்சி” என்றார்.
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சரியான நேரத்தில் பதிவு செய்தால் கேஸ் தட்டுப்பாடு இல்லை. போர் சூழல் காரணமாக சில நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. போர் பதற்றம் தணிந்தவுடன் எரிபொருள் விலை உயர்வுக்கு தீர்வு காணப்படும்” என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு நிலை குறித்து கவலை தெரிவித்த தமிழிசை, “பெண்கள் பாதுகாப்பு அச்சுறுத்தும் அளவுக்கு உள்ளது. இதை இரும்புக் கரம் கொண்டு டிஜிபி கட்டுப்படுத்துவார் என்று நம்புகிறேன். முதலமைச்சர் அறிவித்த சிங்கப்பெண் படை எப்போது செயல்படத் தொடங்கும், அவர்களுக்கு என்ன பணிகள் என்பதில் தெளிவு இல்லை” என்றார்.
மின்வெட்டு பிரச்னைக்கு எதிராக முதலமைச்சர் இல்லத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, தலைமைச் செயலகம் அருகே குடும்பத்துடன் தீக்குளிக்கும் முயற்சி போன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், “மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பொறுப்பேற்ற ஆட்சி, இப்போது எதிர்ப்புகளுக்கு மத்தியில் செயல்படுகிறது. முதலமைச்சர் இந்த விவகாரங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். தேவநேய பாவாணர் நூலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய தமிழிசை, “எல்லா இடங்களிலும் முன்னாள் முதலமைச்சர்களின் படங்கள் நீக்கப்பட்டு தற்போதைய முதலமைச்சரின் படம் மட்டும் வைக்கப்படுகிறது. நூலகத்தில் அனைத்து அமைச்சர்களின் புகைப்படங்களும் இருக்க வேண்டும். அரசு அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். படங்களை மாற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது” என்றார்.
இதையும் படிங்க: காங்கிரஸின் சரித்திரமே துரோகம் தான்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!
முதலமைச்சர் விஜய்யின் பேச்சு மற்றும் உடல் மொழி குறித்தும் விமர்சனம் செய்த அவர், “திருச்சியில் அவர் பேசியது பேச்சாகவே உள்ளது. முதலமைச்சராகி விட்டீர்கள் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது. அதிகாரத்துக்கு வந்த பிறகு உண்மையான முதலமைச்சராக செயல்படுகிறாரா என்பது தெரியவில்லை. பிக்கப் ஆகி, மொழி மற்றும் உடல் மொழியை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறோம்” என்றார். பி.எம். ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்திய தமிழிசை, “மும்மொழிக் கொள்கை மாநிலத்துக்கு எதிரானது என்று சொல்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் அது மாநிலத்துக்கு எதிரானது அல்ல எனத் தீர்ப்பளித்துள்ளது. மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கற்க வேண்டும் என்பதே நாங்கள் சொல்வது. எந்த அழுத்தமும் இல்லை” என்றார்.
மேலும், “தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் எவ்வளவு கலெக்ஷன் செய்யலாம், எவ்வளவு லஞ்சம் வாங்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள் என்று உயர் நீதிமன்றம் சொல்லியுள்ளது. அதிகாரிகள் விவகாரத்தில் அரசு உரிய கவனம் செலுத்தி, முந்தைய அரசைப் போல இல்லாமல் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். பாஜக தொண்டர்கள் குறித்து பெருமிதம் தெரிவித்த தமிழிசை, “எத்தனை தோல்விகள் வந்தாலும் கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன், என் பகுதியில் கட்சியை வளர்ப்பேன் என்று உறுதியுடன் இருக்கும் தொண்டர்களை வணங்குகிறேன். இந்தப் பின்னடைவு தற்காலிகமானது. தொண்டர்களின் கொள்கைப் பிடிப்பும் உறுதியும் கட்சியை மீண்டும் உயர்த்தும்” என்றார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்வியை அவர் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "விஜய் அரசு பாரபட்ச மனநிலையை விட வேண்டும்" சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!