காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் உடனடி ₹10! சென்னையில் ஃபாஸ்ட் ஸ்கேனர் அறிமுகம்!!
இந்த முறையில், வாகனத்தில் ஸ்கேனர் கருவியுடன் பணியாளர் ஒருவர் நிறுத்தப்பட்டிருப்பார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மது பாட்டில்கள் விற்பனையின் போது வசூலிக்கப்படும் கூடுதல் பத்து ரூபாய் டெபாசிட்டை, காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது பொதுமக்களுக்கு உடனடியாக வழங்கும் நடைமுறையை மேலும் திறம்பட செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் புதிய தொழில்நுட்ப வழிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இதுவரை சென்னை எழும்பூரில் உள்ள ஒரு கடையில் பீரோ வடிவிலான ஆட்டோமேட்டிக் கருவி மூலம் காலி பாட்டில்களைப் பெற்று ரொக்கம் வழங்கும் சோதனை முயற்சி நடைபெற்றது. ஆனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் குறைந்த இடவசதியுடன் இயங்குவதால், அத்தகைய பெரிய இயந்திரங்களை எல்லா இடங்களிலும் நிறுவுவது சாத்தியமில்லை என்பது தெளிவாகியது.
இந்த சவாலை சமாளிக்க, தினசரி அதிக அளவில் மது விற்பனை நடைபெறும் கடைகளில் ‘ஃபாஸ்ட் ஸ்கேனர்’ எனும் கருவியைப் பயன்படுத்தி வாகனங்களிலேயே காலி பாட்டில்களை வாங்கும் புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது சென்னை திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் பகுதிகளில் உள்ள தலா ஒரு கடையில் இது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில், வாகனத்தில் ஸ்கேனர் கருவியுடன் பணியாளர் ஒருவர் நிறுத்தப்பட்டிருப்பார்.
இதையும் படிங்க: உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!
வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் காலி பாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து தரவுகளைச் சரிபார்த்த பிறகு, பாட்டிலை ஏற்றுக்கொண்டு உடனடியாக பத்து ரூபாயைத் திரும்ப வழங்குவார். இதன் மூலம் கடைக்குள் இட நெருக்கடி ஏற்படாமல், தினசரி தேவையான அளவுக்கு காலி பாட்டில்களை தடையின்றி சேகரிக்க முடியும் என டாஸ்மாக் தரப்பு கணித்துள்ளது. வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படும் பாட்டில்கள் அனைத்தும் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் முறையாக ஒப்படைக்கப்படும்.
இதற்கிடையே, கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக டாஸ்மாக் பணியாளர்கள் தரப்பில் கோரிக்கைகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இதனால், பணியாளர்கள் அல்லாத வெளிநபர்களை ஈடுபடுத்தி பாட்டில்களைத் திரும்பப் பெறும் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேலும், கூட்ட நெரிசல் மிகுந்த பீக் நேரங்களில் வேகமாகச் செயல்பட மொபைல் போன் வடிவிலான சிறிய ஸ்கேனர் கருவிகளையும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் காலி பாட்டில் சேகரிப்பு முறைப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் வசதி ஆகியவை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் நிர்வாகம் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, அனைத்து கடைகளிலும் திறம்பட செயல்படும் வகையில் சீரமைக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: 175 பேருடன் வந்த விமானம்... தரையிறங்கும் முன் மீண்டும் வானில் பறந்ததால் அதிர்ச்சி!