“பதவி வேணுமா எங்கள அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ...”- தவெக நிர்வாகிகள் மீது பெண் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு..!
பலமுறை இரட்டை அர்த்தமுள்ள, ஆபாசமான வார்த்தைகளைப் பேசி, கட்சியில் மேல் பொறுப்பு வேண்டுமென்றால் மேலே உள்ள பொறுப்பாளர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும் என்று கூறி வந்ததாகவும் தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் மீது அக்கட்சியைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் நிர்வாகி ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முதலமைச்சர் விஜய்யின் தீவிர ரசிகையான இவர், ரசிகர் மன்றத்தில் இருந்து தற்போது தமிழக வெற்றி கழகம் வரை தொடர்ந்து பயணித்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாதிக்கப்பட்ட பெண், கட்சி சம்பந்தமாக ஆறுமுகநேரி நகர செயலாளராக இருக்கும் நிவாஸ் கண்ணன் மூலம் கடந்த தேர்தலில் கட்சிக்காக மிகவும் கடினமாக உழைத்ததாகவும், இந்நிலையில் நிவாஸ் கண்ணன் தன்னிடம் பலமுறை இரட்டை அர்த்தமுள்ள, ஆபாசமான வார்த்தைகளைப் பேசி, கட்சியில் மேல் பொறுப்பு வேண்டுமென்றால் மேலே உள்ள பொறுப்பாளர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும் என்று கூறி வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி..! கூச்சமே இல்லாம காலில் விழுவாங்க..! அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்.!!
தான் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகை என்பதால், இதனைப் பொறுத்துக்கொண்டு கட்சியில் பயணித்து வந்ததாகவும் அவர் கூறினார்.
“நான் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். நான் ரசிகர் மன்றத்தில் இருந்து விஜய் அண்ணாவின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறேன். ரசிகர் மன்றத்தில் இருந்து விஜய் இயக்கத்திலும், அதற்குப் பிறகு தவெக கட்சி ஆரம்பித்ததில் இருந்தும் பொறுப்பில் இருக்கிறேன்.
தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். நிவாஸ் கண்ணன், ஆறுமுகநேரி நகர செயலாளர் மூலம் எனக்கு நன்றாகத் தெரியும். பிரைட்டர் மூலமும் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இவர்கள் எல்லாரும் சேர்ந்து எனக்கு ஒரு பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி, ஆசை வார்த்தைகளைக் கூறி என்னை மிகவும் டார்ச்சர் செய்தார்கள்.
அதற்குப் பிறகு என்னை மனரீதியாகவும், வேறு விதமாகவும் தொந்தரவு செய்தனர். வாட்ஸ் ஆப் கால், வீடியோ கால் என தொடர்ந்து அழைத்தனர்.
ஒருமுறை காயல்பட்டினம் பைபாஸ் சாலையில் நான் நின்றிருந்தபோது, என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பினர். நிவாஸ் கண்ணன், பிரைட்டரிடம் கூறி, நான் இரவு 12 மணிக்கு போலீஸ்காரர்களிடம் லிப்ட் கேட்டதாகவும், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மத்தியில் அவதூறு பரப்பி என்னை அசிங்கப்படுத்தியும் வருகின்றனர்.
இதுகுறித்து நான் அமைச்சரிடம் கூறியபோதும், அமைச்சர் இதற்கு செவி சாய்க்கவில்லை. அதன்பிறகு பிரைட்டர் மூலம் எனக்கு மனவருத்தம் ஏற்படும் வகையில் பேசினர்.
மேலும், நிவாஸ் கண்ணன், ஆட்டோக்குட்டி அமலன் உள்ளிட்டோர் எனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். ‘நீங்கள் இப்படி மனு கொடுத்தால், பிரைட்டர் மற்றும் நிவாஸ் கண்ணன் மீது நடவடிக்கை எடுத்தால், நீங்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடுவோம்’ என்று தினமும் மிரட்டுகின்றனர்.
இதை நான் தலைமையிடம் கொண்டு செல்லலாம். ஆனால் நான் விஜய்யின் தீவிர ரசிகை என்பதால், முதலில் தலைமையிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்” என அந்த பெண் தெரிவித்தார்.
தனது செல்போனில் இதற்கான ஆடியோ ஆதாரங்கள் இருந்ததால், ரோஸ்வெல்ட் மற்றும் பிரைட்டர் ஆகியோர் கூலிப்படையை ஏவி தனது செல்போனைப் பறித்துச் சென்றுவிட்டதாகவும், இது சம்பந்தமாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டார்.
மேலும், இது சம்பந்தமாக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தை சந்தித்து ரோஸ்வெல்ட் மற்றும் பிரைட்டர் மீது புகார் அளித்தும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று அமைச்சர் அலட்சியமாக கூறியதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.
“மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அண்ணனிடம் சென்று முறையிட்டேன். என்னுடைய செல்போனில் இவர்கள் பேசிய ஆடியோ பதிவுகள், மெசேஜ்கள் எல்லாம் இருக்கின்றன. அதை அமைச்சரிடம் காட்டிவிடுவேன் என்று கூறினேன்.
பிரைட்டர், ரோஸ்வெல்ட், நிவாஸ் கண்ணன் உள்ளிட்ட அனைவரையும் பற்றி தெரிவித்தேன். ஜூன் 26-ஆம் தேதி இரவு 8 மணிக்கு, திமுகவைச் சேர்ந்த சிபாஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். அவர் எனது வீட்டின் அருகிலேயே வந்தார்.
அன்றிரவு எனது செல்போனை கூலிப்படையினரை வைத்து பறித்துச் சென்றனர். நான் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தேன். பின்னர் அது எஃப்ஐஆராக பதிவு செய்யப்பட்டது.
எஃப்ஐஆர் பதிவு செய்த பிறகு, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டேன். ஆனால், பிரைட்டர் மற்றும் ரோஸ் தொடர்பாக வந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று கூறி, பலமுறை என்னைத் தவிர்த்தார்.
அதன்பிறகு சிபாஷ் என்பவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர். தற்போது பிரைட்டரை மட்டும் தேடி வருகின்றனர். அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது” என அந்தப் பெண் தெரிவித்தார்.
கட்சியில் வளர வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் அல்லது தாங்கள் சொல்வதற்கு இணங்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் மிரட்டுவதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அந்தப் பெண் கூறியதாவது:
“நிவாஸ் கண்ணன் மீது எனக்கு நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. நிவாஸ் கண்ணனைப் பற்றி நான் பலமுறை பிரைட்டரிடம் கூறியபோதும், பிரைட்டர் அதை காதுகொடுத்து கேட்கவில்லை.
அரசியல் ரீதியாக பார்த்தால் இங்கு திருச்செந்தூரில் இரண்டு அணிகளாக இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஏன் இரண்டு அணிகளாக இருக்கிறோம்? நீங்கள் பெண்ணை ஒழுங்காக மதித்தால்தானே நாங்கள் உங்களுடன் இருக்க முடியும். நீங்கள் பெண்ணை அவமதித்தால் நாங்கள் இரண்டு அணிகளாகத்தான் இருப்போம்.
இப்போது அரசியல் ரீதியாக நான் பேச வரவில்லை. ஒருவேளை அரசியல் ரீதியாக பேசினால், ‘காசு வேண்டும்; காசு இல்லையென்றால் எங்களுக்கு இணைந்து போக வேண்டும்’ என்று சொல்கிறார்கள். அப்படி நாங்கள் போக முடியாது.
நாங்கள் தீவிர ரசிகர்களாக, ரசிகர் மன்றத்தில் இருந்து வந்தவர்கள். தவறு என்றால் தவறு என்று கேட்பவர்கள். அதனால் என்னைத் தொடர்ந்து துரத்தி வருகின்றனர்.”
அமைச்சர் மீது புகார் அளிக்க விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, “அமைச்சர் மீது நான் புகார் கொடுக்கவில்லை. ஆனால் அமைச்சரிடம் சென்று முறையிட்டேன். அமைச்சர் இதுவரை எனக்கு பதில் தரவில்லை” என தெரிவித்தார்.
தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குறிப்பிட்ட அந்தப் பெண், தனது செல்போனில் அனைத்து ஆதாரங்களும் இருப்பதால் அந்த செல்போனை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
“நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிபாஷின் ஆதரவாளர். நேற்று இரவு 8 மணி முதல் 8.30 மணி அளவில் நான் எங்கள் வீட்டின் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தேன்.
முகம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. மூன்று கார்கள் என் வீட்டு அருகே வந்து நின்றன. எனக்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. பிரைட்டர், ரோஸ்வெல்ட், சிபாஷ் ஆகிய மூன்று பேர் மீதும் எனக்கு சந்தேகம் உள்ளது. அவர்கள் ஒவ்வொருவராக தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள். யார் என்று எனக்குத் தெரியவில்லை.
எனக்கு இப்போது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.
தவெகவைப் பொறுத்தவரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நான் சொல்லவில்லை. தவெக பெண்களுக்கு முழு ஆதரவு கொடுக்கிறது. ஆனால் எனக்கு அந்த ஆதரவு கிடைக்கவில்லை.
அமைச்சர் இப்போதுதான் ஊருக்கு வந்திருக்கிறார். நான் அமைச்சரிடம் இரண்டு, மூன்று முறை முறையிட்டுள்ளேன். அமைச்சர் இன்று என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதைப் பார்க்கிறேன்.
நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக என்னை மிரட்டுவதற்காக சிலர் வந்தனர். ரோஸ்வெல்ட்டிடம் 5,000 ரூபாய் வாங்கியதாகவும், பின்னர் 75,000 ரூபாய் கொடுக்காமல் இருந்ததால் என் வீட்டிற்கே வந்ததாகவும் கூறினர்.
நான் அவர்களிடம் வெளியே செல்லுங்கள், இல்லையென்றால் எஸ்.பி. அலுவலகத்திற்குச் செல்வேன் என்று கூறினேன். இப்போது மீண்டும் வாட்ஸ் ஆப் கால் மூலம் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.
அமைச்சர் இதுவரை என்னைத் தொடர்புகொள்ளவில்லை. தற்போது எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறார்கள். எனது செல்போன் எனக்கு மீண்டும் கிடைக்க வேண்டும். அதில்தான் உள்ள ஆதாரங்களை நான் காட்ட முடியும்.
அந்த செல்போனில் பலரது ஆடியோ பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் உள்ளன. முதலில் நிவாஸ் கண்ணன், இரண்டாவதாக பிரைட்டர், மூன்றாவதாக மணப்பாடு பகுதியில் உள்ள ரோஸ்வெல்ட், மணப்பாடு அமலன், திருச்செந்தூர் ஆட்டோக்குட்டி, தூத்துக்குடியைச் சேர்ந்த பிரைட்டி உள்ளிட்ட பலர் தொடர்பான பதிவுகள் அதில் உள்ளன.
இவர்கள் பேசிய ஆடியோ, மெசேஜ்கள் அனைத்தும் அந்த செல்போனில் இருக்கின்றன. அந்த செல்போன் எனக்கு கிடைக்க வேண்டும். அது கிடைக்காத பட்சத்தில் அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன்.
தற்போது எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளேன். எஸ்.பி. என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கிறேன்” என அந்தப் பெண் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொன்னேரி தவெகவுக்குள் “கும்மாங் குத்து”... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்தது அதிரடி ஆக்ஷன்...!