×
 

கண்காணிப்பு வளையத்திற்குள் 100 மாணவர்கள்; தனியார் கல்லூரியை சுத்துப்போட்ட சுகாதாரத்துறை - நெல்லையில் பரபரப்பு...!

நெல்லை பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு எலி காய்ச்சல் பாதிப்பு விவகாரம்: 100 மாணவர்களை கண்காணிப்பு வளையத்திற்கு வைத்திருக்கும் சுகாதாரத்துறை

நெல்லை திடியூர் பகுதியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். வெளியூரை சேர்ந்த மாணவர்களும் படிப்பதால் இங்கேயே தங்கி இருந்து படிப்பதற்காக அவர்களுக்கு தங்கும் விடுதியும் கல்லூரி உள்ளேயே செயல்பட்டு வருகிறது. 

கல்லூரியின் அருகே நம்பியாற்றில் இருந்து உபரி நீர் சென்று கொண்டிருக்கிறது. இதை கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர், உணவு தயாரிப்பது உள்ளிட்ட  பயன்பாடுகளுக்காக எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் சேகரித்து பயன்படுத்தினர். 

இதனால் கல்லூரியில் விடுதிகளில் தங்கி இருந்து படிக்கும் 8 மாணவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், உடல் வலி என உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட பொது  சுகாதாரத்துறை நோய் தடுப்பு மருந்து துறை  அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று  சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரி தங்கும் விடுதிகள், உணவு தயாரிக்கும் உணவு கூடங்கள், குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டிகளில் தீவிர ஆய்வு நடத்தினர். 

இதையும் படிங்க: எலிக்காய்ச்சல் எதிரொலி... கல்லூரியை இழுத்து மூடுங்க... சுகாதாரத்துறை கறார் உத்தரவு...!

அப்போது சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருப்பது, வளாகங்கள் சுகாதாரமில்லாமல் இருப்பது உறுதியானது. உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்தும் அவர்கள் பயன்படுத்திய தண்ணீர் குறித்தும் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதிலும் சுகாதாரம் இல்லாத தண்ணீரை பயன்படுத்தியது தெரிந்தது. 

அதிரடியாக  சுகாதாரத்துறை அதிகாரிகள் சுகாதாரமான முறையில் மாணவர்களுக்கு குடிநீர், உணவுகள் உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்யும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கி உத்திரவிட்டனர். அதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தினர் தேதி  குறிப்பிடாமல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட 8 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  7 பேருக்கு எலிக்காச்சல் அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி தங்கும் விடுதி உணவகத்தில் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் சுகாதாரம் இல்லாத முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்திற்கு செயல்பட்ட 2 உணவகங்களின்  உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளனர். இன்று காலை சுகாதாரத் துறையினர் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரியில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் விடுதியில் யாரேனும் வட மாநில தொழிலாளர்கள், மாணவர்கள் தங்கி இருக்கிறார்களா என ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து 7 பேர் எலிக்காய்ச்சலால் தற்போது வரை பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுடன் படித்த 100 மாணவர்களிடம் தொலைபேசி மூலமாக சுகாதாரத் துறையினர் பேசி விவரங்களை சேகரித்து அவர்களையும் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர். இதை அந்தந்த பகுதிகளில் இருக்கும் வட்டார மருத்துவ அலுவலர்கள் செய்து வருகின்ற நிலையில் கல்லூரி வளாகத்திற்குள் மருத்துவ முகாமையும் அமைக்க ஏற்பாடு செய்து உள்ளனர்.

இதையும் படிங்க: நெல்லை தனியார் கல்லூரியில் அடுத்தடுத்து பரபரப்பு... 7 மாணவர்கள் மருத்துமவனையில் அனுமதி ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share