×
 

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை! முதல்வர் விஜய் உத்தரவு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை விரைந்து மீட்கவும் உதவிகளை வழங்கவும் புதுதில்லி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இமயமலை நாடான நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்ரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பாதிக்கப்பட்ட தமிழர்களை விரைந்து மீட்கப் போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உயர் அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் முக்கிய ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புக் கட்டமைப்புகள் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளன. இதில் கைலாஷ் - மானசரோவர் யாத்திரை மற்றும் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் மாயமாகியுள்ளதாகக் குடும்பத்தினர் கண்ணீருடன் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில், பேரிடரில் மாயமான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை உடனடியாகக் கண்டறிந்து பத்திரமாக மீட்கவும், அவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ மற்றும் உணவு நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு இயந்திரம் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் தங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறவும், தமிழ்நாட்டில் உள்ள அவர்களது பதற்றத்தில் இருக்கும் உறவினர்கள் நிலவரங்களைத் தெரிந்துகொள்ளவும் ஏதுவாக தமிழ்நாடு இல்லத்தின் சார்பில் 24 மணி நேர அவசரக் கட்டுப்பாட்டுத் தொலைபேசி எண்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

மேலும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) மற்றும் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு அரசுத் தரப்பு அதிகாரிகள் உடனுக்குடன் தொடர்புகொண்டு பேசி வருவதாகவும், தமிழர்களின் இருப்பிடங்களை நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் ட்ராக் செய்து அவர்களின் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்யத் தேவையான அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “ரீல்.. ரீல்” என சைகை காட்டிய எ.வ.வேலு.. சிரித்த முதல்வர் விஜய்! சட்டசபையில் நடந்த சுவாரஸ்ய தருணம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share