மின்வாரிய ஹார்ட் டிஸ்க் திருட்டில் பரபரப்பு பின்னணி... கையும் களவுமாக சிக்கிய குற்றவாளி...!
தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், 397 கோடி ரூபாய் மதிப்பிலான மின்மாற்றி டெண்டர் தொடர்பான முக்கிய தகவல்கள் சேமிக்கப்பட்டிருந்த 18 ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போன வழக்கில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் கோபிநாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
397 கோடி ரூபாய் மதிப்பிலான மின்மாற்றி டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களின் விவரங்கள், டெண்டர் ஆவணங்கள், எந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது, அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலை உள்ளிட்ட முக்கிய தகவல்கள் மின்வாரிய தலைமை அலுவலக கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அலுவலகத்தின் 4, 5, 7 மற்றும் 10-வது மாடிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினிகளில் இருந்த 18 ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. முதலில், 5-வது மாடியில் உள்ள நீர்மின் பிரிவில் உதவி செயற்பொறியாளர் மலர்விழி பயன்படுத்தி வந்த கணினியில் இருந்த ஹார்ட் டிஸ்க் கடந்த மே 18-ஆம் தேதி காணாமல் போனது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பல்வேறு பிரிவுகளில் இருந்து மொத்தம் 18 ஹார்ட் டிஸ்க்கள் மாயமானது தெரியவந்தது.
இதையும் படிங்க: பேரதிர்ச்சியில் தமிழக அரசு... மின்வாரிய அலுவலகத்திற்குள் நடந்த பகீர் சம்பவம்... ரகசிய டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்கள்...!
இந்த திருட்டு சம்பவத்தில், மின்வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த அரக்கோணத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஒப்பந்த ஊழியர் கோபிநாத் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. உதவி செயற்பொறியாளர் மலர்விழியின் கணினியில் இருந்த ஹார்ட் டிஸ்கை திருடிய பின்னரும், கணினியை ஆய்வு செய்வது போல் நடித்து சந்தேகத்தைத் தவிர்க்க முயன்றதாக கூறப்படுகிறது.
கோபிநாத்தை கைது செய்து விசாரணை நடத்திய போலீசாரிடம், திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்களை பெங்களூருவில் விற்றுவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சிந்தாதரிப்பேட்டை தனிப்படை போலீசார் அவரை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று, திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்களை மீட்டதுடன், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், ஹார்ட் டிஸ்க் திருட்டு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதுவரை காணாமல் போன 18 ஹார்ட் டிஸ்க்களும் பல்வேறு தளங்களிலும், வெவ்வேறு பிரிவுகளிலும் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவற்றில் இருந்த தரவுகளுக்கான மாற்றுப் பிரதிகள் சில இடங்களில் பாதுகாப்பாக உள்ளன. அந்த தரவுகளை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில தகவல்களுக்கு அச்சு வடிவிலான ஆவணங்களும் உள்ளன. அவற்றின் அடிப்படையில் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கில் இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹார்ட் டிஸ்க்கள் எங்கு எங்கு எடுத்துச் செல்லப்பட்டன, யாரிடம் சென்றன, அவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: மருத்துவ இடங்கள் சர்ச்சை... உதயநிதிக்கு இது தெரியாதா..? அமைச்சர் அருண்ராஜ் கிடுக்கிப்பிடி கேள்வி..!