தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம்..!! மாணவர்களே.. கவுன்சிலிங் வேணுமா..?? இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க..!!
டெலி கவுன்சிலிங் தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்று கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (20.05.2026) வெளியிடப்பட உள்ளன. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இதை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கிய தேர்வுகள் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவ-மாணவிகளும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் என மொத்தம் சுமார் 9 லட்சம் பேர் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வை எழுதினர்.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு சமீபத்தில் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணியும் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியீட்டுக்கு பள்ளிக்கல்வித் துறை மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் முழு ஈடுபாட்டுடன் தயாரிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழியாக அறிந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக 10-ம் வகுப்பு முடிவுகள் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு அடித்தளம் அமைப்பதால், இந்த முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
இதையும் படிங்க: மக்கள் நலன் கருதி 5,000 மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!
மன அழுத்தத்தை எதிர்கொள்ள மனநல உதவி: தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பும் பின்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகும் சூழல் உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் “நட்புடன் உங்களோடு” திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் கட்டணமில்லா டெலி கவுன்சிலிங் சேவை வழங்கப்படுகிறது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இயங்கும் இந்தச் சேவையை 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு பயன்படுத்தலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் மூலம் தரமான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. முடிவுகளால் ஏற்படும் கவலை, பயம், மனச்சோர்வு போன்றவற்றை சமாளிக்கவும், நேர்மறையான அணுகுமுறையுடன் முன்னேறவும் இந்த ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் தயக்கமின்றி தொடர்புகொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களின் மன உறுதியைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகும் இந்தச் சேவை தொடரும் என்பதால், தேவைப்படும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செப்டம்பரில்.. டெல்லியில் நடைபெறுகிறது பிரிக்ஸ் உச்சி மாநாடு..!! ரஷிய அதிபர் புதின் பங்கேற்பு..!!