அறிவாலயத்தில் ஓபிஎஸ்! தென் மாவட்ட திமுக வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கினார் ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், ஒவ்வொரு மாவட்ட வாரியாக விருப்ப மனு அளித்தவர்களை நேரில் சந்தித்து நேர்காணல் நடத்தினர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் திமுக அதிரடியாகக் களம் இறங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தென் மாவட்டங்களுக்கான வேட்பாளர் நேர்காணலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தினார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்தவர்களிடம் முதலமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தினார்.
சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தனது மகன் ஓ. ரவீந்திரநாத் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் இந்த நேர்காணலில் பங்கேற்றார். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் அணியினருக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: மத்திய அரசு என்ன செய்ய போகிறது? சிலிண்டர் தட்டுப்பாட்டில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடி கேள்வி!
வாரிசு அரசியல் அல்லது செல்வாக்கு என்பதை விட, தொகுதியில் மக்கள் மத்தியில் யாருக்கு நற்பெயர் இருக்கிறது? வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? என்ற அடிப்படையில் மட்டுமே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தென் மாவட்டங்களில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், அவற்றை முறியடிக்கக் கூடிய பலமான வேட்பாளர்களைக் களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளது.
மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை இந்த நேர்காணல்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு நடைபெற்றது. இன்று மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 22-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுடன் நேர்காணல் நிறைவடைகிறது.
ஓ. பன்னீர்செல்வம் திமுகவின் வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்பது தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. தேனி மற்றும் போடிநாயக்கனூர் தொகுதிகளில் ஓபிஎஸ் தரப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தமிழக மின் உற்பத்தியில் புதிய மைல்கல்! ரூ.13,077 கோடியில் உடன்குடி அனல் மின் நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர்!