4 சுங்கச்சாவடிகளில் கட்டண நிலுவை தொடர்பான வழக்கு.. இன்று மீண்டும் விசாரிக்கிறது ஐகோர்ட்..!
தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டண நிலுவை தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரிக்கிறது.
மதுரை-கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட், கன்னியாகுமரி-எட்டுரவட்டம் டோல்வே பிரைவேட் லிமிடெட், சாலைப்புதூர்- மதுரை டோல்வே பிரைவேட் லிமிடெட் மற்றும் நாங்குநேரி-கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. அதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை நீண்ட நாட்களாக செலுத்தாமல் உள்ளதாகவும், நிலுவைத் தொகை இன்னும் ரூ.276 கோடியை செலுத்தப்படாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பேருந்துகளை நிறுத்தி கட்டணம் வசூலிக்க முடியாத சூழல் உள்ளதாகவும், இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 4 டோல்கேட்களில் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். அதன்படி கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில், வரும் 10ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க தமிழக டிஜிபி, தென் மண்டல ஐஜிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதியில்லை.. காரணம் இதுதான்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
நிலுவைத் தொகையைத் தீர்க்காமல் பிரச்சனையை நீட்டித்துக் கொண்டே இருந்தால், ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடிக்கு மேல் உயர்ந்துவிடும் என்று கூறி வழக்கை முடித்துவைத்த நீதிபதி, போக்குவரத்து கழகங்களின் இந்த நடவடிக்கையால், பொது மக்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். மேலும் அரசு அதிகாரிகள் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு விரைவாகச் செயல்படவில்லை என்றும், சுங்கச்சாவடிகளில் பேருந்துகளை நிறுத்தி தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், அவர்களால் அதைச் செய்ய முடியாமல் போகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்
இந்நிலையில், தென்மாவட்ட சுங்கச்சாவடிக்கு தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை செலுத்துவது தொடர்பான பிரச்சனை மாநில போக்குவரத்து துறை கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் நல்ல ஒரு தீர்வை எட்ட உள்ளதாகவும், எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஆஜராகி முறையிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த், கிருஷ்ணா.. நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் அதிரடி..!