ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!
தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டதைத் தொடர்ந்து, வரும் மார்ச் 30-ஆம் தேதி (திங்கட்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாகத் தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக இருந்த 'விஜய் பிரசார அனுமதி' விவகாரம் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டதைத் தொடர்ந்து, வரும் மார்ச் 30-ஆம் தேதி (திங்கட்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இடநெருக்கடி மற்றும் மாநகராட்சிப் பணிகள் போன்ற காரணங்களைக் கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்ததை விஜய் அவர்கள் ஜனநாயகத்தின் மீதான பாசிசத் தாக்குதல் எனக் கடுமையாகச் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வரும் திங்கட்கிழமை (மார்ச் 30) நண்பகல் 12 மணியளவில், விஜய் அவர்கள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். அவர் போட்டியிடும் தொகுதி குறித்துப் பல்வேறு யூகங்கள் நிலவினாலும், அவர் பெரம்பூர் தொகுதியிலேயே களம் காண்பார் எனத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு, அன்று மதியம் 2 மணிக்குப் பெரம்பூரில் தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
இதையும் படிங்க: பெண்களை சப்போர்ட்-க்கு அழைத்து.. சர்ச்சையில் சிக்கிய மம்தா பானர்ஜி..!! விளக்கம் கேட்ட எலக்ஷன் கமிஷன்..!!
இன்று மாலை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களைச் சந்தித்த விஜய், தனது கட்சிக்குப் பிரசார அனுமதி மறுக்கப்படுவதாகவும், ஆளும் கட்சிக்குச் சார்பாக அதிகாரிகள் செயல்படுவதாகவும் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது அனுமதி கிடைத்துள்ளது.
பிரசாரத்திற்கு முன்பாக, நாளை (மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெறும் கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 264 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் அவர்கள் அறிமுகம் செய்து வைக்கிறார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவெக-வின் இந்த அதிரடித் தொடக்கம் தேர்தல் களத்தை மும்முனைப் போட்டியாக மாற்றியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் அதிரடி: தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்.பி-க்கள் அதிரடி மாற்றம்!