தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!
தமிழக வெற்றிக்கழக நிர்வாகி கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
சென்னை அடையாறு அருகே வண்ணாந்துறை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நகரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இரவு சுமார் 9.30 மணிக்கு ராமசாமி அவென்யூ எல்லையம்மன் கோயில் தெருவில் நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்த கண்ணனை, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் திடீரென வழிமறித்தது. முதலில் இருவர் கத்தியால் தாக்கத் தொடங்கியதும், பின்னர் மேலும் மூவர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சேர்ந்து ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.
தப்ப முயன்ற கண்ணன் தெருவிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். அவரது நண்பர்கள் தப்பி ஓடி உதவி கேட்டனர்.இந்த கொடூர சம்பவத்தின் முழுக் காட்சியும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பொதுமக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளன. கொலைக்குப் பிறகு கொலையாளிகள் சாவகாசமாக செல்வதைக் காட்டும் கூடுதல் சிசிடிவி பதிவுகளும் வெளியாகியுள்ளன.
கொலை நடந்த தெருவுக்கு மிக அருகிலேயே அவர்களில் ஒருவரின் பைக் திடீரென பழுதடைந்தது. அந்த இடத்திலேயே அவர்கள் நின்று ஆலோசனை நடத்தினர். பயமும் அவசரமும் இல்லாத அந்த நடவடிக்கை, சம்பவத்தின் தீவிரத்தை மேலும் வெளிப்படுத்துகிறது. பின்னர் அந்தப் பைக்கை டோ வாகனம் மூலம் இழுத்துச் சென்று தப்பினர்.கண்ணன் 45 வயதுடையவர். வண்ணாந்துறை பகுதியைச் சேர்ந்த இவர் ஐடி நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விடும் தொழிலையும், ரியல் எஸ்டேட் வியாபாரத்தையும் செய்து வந்தார். முன்பு அதிமுகவில் 174 ஆவது தெற்கு வட்டச் செயலாளராக இருந்த அவர், சமீபத்தில் தவெகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். காவல் துறை பதிவேட்டில் பி பிரிவு சரித்திரப் பதிவு கொண்டவர் என்றும், பழைய கொலை வழக்குகளில் தொடர்பு இருந்ததாகவும் தெரிகிறது.முதற்கட்ட விசாரணையில் இந்தக் கொலை முன்விரோதத்தின் அடிப்படையில் நடந்ததாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!
கடந்த 2009 ஆம் ஆண்டு அடையாறு பகுதியில் சிவா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்ணன் தொடர்புடையவராக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், சிவாவின் உறவினர்கள் இணைந்து இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாக விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதானவர்களில் ஒருவரான பரணி சிவாவின் மருமகன் ஆவார். மேலும் 2016 ஆம் ஆண்டு பரணியின் தந்தை வேலு கொல்லப்பட்ட சம்பவமும் இந்த விரோதத்திற்குக் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.சாஸ்திரி நகர் காவல் நிலையத்தினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தனிப்படைகளை அமைத்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் அடையாறு பகுதியைச் சேர்ந்த பரணி, ராகேஷ், நரேஷ், மணிகண்டன், ஹரிகரன் ஆகிய ஐந்து இளைஞர்களை கைது செய்தனர்.
அனைவரும் சுமார் 20 வயதுடையவர்கள். அவர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதி காவல் அதிகாரிகள் சிலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தலைநகரின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கும் நிலையில், காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தி மேலும் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளில் தெரியும் கொலையாளிகளின் சாவகாசமான நடவடிக்கை, குற்றச் செயலின் திட்டமிட்ட தன்மையை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சர்க்காரியா கமிஷன்..! விவாதிக்க தெம்பு, திராணி இருக்கா.? முதல்வருக்கு ஆர். எஸ். பாரதி சவால்.!!