தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!
வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும் என்று தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொடர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று கன்னியாகுமரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி கோரிய தவெகவுக்கு, மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக விஜய் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்றார். மகாதானாபுரம் ரவுண்டானாவில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், தனது அரசு அமைந்தால் செயல்படுத்த உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்.
லஞ்சம் ஒழிப்பு மற்றும் நலத்திட்ட விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிய விஜய், “ஆவணங்களின் பெயரால் லஞ்சம் வாங்குவதையும், மக்களை அலைக்கழிப்பதையும் எங்கள் அரசு அறவே அனுமதிக்காது” என்று உறுதியளித்தார். மேலும், “நலத்திட்டங்களுக்காக மக்கள் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. வீடு தேடி அரசின் திட்டங்கள் சென்று சேரும்” என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!
தனது அரசு பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் “வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்” என்ற பெயரில் ஒரு ஒருங்கிணைந்த மொபைல் செயலியை உருவாக்கப் போவதாக விஜய் அறிவித்தார். இந்தச் செயலியில் பல்வேறு அரசு சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்றார். லஞ்சம் இல்லாத, தடையற்ற நலத்திட்ட விநியோகத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, “10,000 கையெழுத்துக்களுடன் மனு அளித்தால் கட்டாயம் பதில் அளிக்கப்படும். 10 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனு அளிக்கப்பட்டால், அது சட்டமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று கூறினார். மக்களின் ஆலோசனைகளைப் பெற புதிய இணையதளம் ஒன்றை உருவாக்க உள்ளதாகவும், அதன் மூலம் அரசுக்கு பரிந்துரைகளை வழங்கலாம் என்றும் விஜய் தெரிவித்தார். அரசு சேவைகள் தாமதமானால் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒரு நாள் முழுவதும் மக்களின் மனுக்களை விவாதிப்பதற்காக ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக “ஏஐ சிட்டி” (AI City) அமைக்கப்படும் என்ற பெரும் அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார். இதன் மூலம் தமிழ்நாடு ஏஐ டிஜிட்டல் தலைநகரமாக உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களும் மொபைல் போனிலேயே இருக்கும் வசதி செய்யப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி அடையாள அட்டை வழங்கப்பட்டு, லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள் நேரடியாக வீட்டு வாசலுக்கு வந்து சேரும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: உங்க விஜய்.. நான் வரேன்..!! இனி BLAST தான்..!! பெரம்பூர் தொகுதியில் நாளை பிரச்சாரம்..??