BREAKING: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரு சகோதரிகள் பலி: திருச்செந்தூர் பயணத்தில் நேர்ந்த சோகம்!
திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்க வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் இன்று மாலை இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரகுமார் என்பவர், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்க வந்துள்ளார். திருச்செந்தூர் செல்வதற்கு முன்பாக, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் அருணாச்சல சுவாமிகள் கோயிலில் தரிசனம் செய்யத் திட்டமிட்டு அங்கு வந்துள்ளனர்.
சாமி தரிசனம் முடித்த பின், சங்கரகுமாரின் மகள்களான அபிநயா (16) மற்றும் மீனாட்சி (12) ஆகிய இருவரும் அருகில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். ஆற்றைக் கண்ட உற்சாகத்தில் உடன் வந்தவர்களுக்கு முன்னதாகவே ஓடிச் சென்று ஆற்றில் குதித்த இருவரும், நீரோட்டத்தின் வேகத்தில் சிக்கித் திடீரெனக் காணாமல் போயினர்.
இதையும் படிங்க: “சில்லறை பையன் சீமான்; நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது!” திருச்செந்தூரில் நாஞ்சில் சம்பத் அதிரடி!
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், ஏரல் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஒரு சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். மற்றொரு சிறுமிக்கு மூச்சு இருப்பதை உணர்ந்த மீட்புப் படையினர், அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர்.
ஆற்றுப் பகுதியில் மணல் அதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் தீயணைப்புத் துறையினர் அந்தச் சிறுமியைக் கையில் தூக்கிக்கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி ஏரல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமியும் உயிரிழந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களது இரண்டு மகள்களையும் பறிகொடுத்த பெற்றோரும் உறவினர்களும் ஆற்று மணலில் அமர்ந்து கதறி அழுதது பார்ப்போரை நிலைகுலைய வைத்தது. திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்க வந்த இடத்தில் நிகழ்ந்த இந்தச் சோகமான முடிவு ஏரல் பகுதி மக்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேனியில் நாதக - தவெக இடையே கடும் மோதல்! தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. மா.செ. தலைமறைவு!