திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் வி.சி.க., இடம்பெற்றதை, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. அவர்கள், கட்சி தலைவர் திருமாவளவனுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
சென்னை: தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.,) இடம்பெற்றதற்கு கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தனித்து களமிறங்கப் போவதாக அறிவித்த திருமாவளவன், பின்னர் முடிவை மாற்றினார். மேலும், ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக இருந்த ஆளூர் ஷா நவாஸ், பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு தேர்தல் சீட் மறுக்கப்பட்டது.
இதனால் மூவரும் கட்சித் தலைமையுடனான தொடர்பை துண்டித்தனர். பாலாஜி மட்டும் கட்சிப் பணிகளைத் தொடர்கிறார். ஆனால் ஆளூர் ஷா நவாஸ் முதன்மை செயலர் பதவி பெற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் உள்ளார். தனது சமூக ஊடகப் பக்கங்களில் கட்சிப் பொறுப்புகளை நீக்கியும் உள்ளார்.
இதையும் படிங்க: பதவி ஆசையா.? தவெக கூட்டணி எதற்கு..? சர்ச்சைகளுக்கு டாட் வைத்த திருமா..!
இந்நிலையில், “பா.ஜ., பெற்றெடுத்த பிள்ளை என விமர்சித்துவிட்டு த.வெ.க.,வுடன் கூட்டணி” என்று சாடிய பனையூர் பாபு கட்சியில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து ஆளூர் ஷா நவாஸும் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் பல நிர்வாகிகள் விலகும் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வி.சி.க., நிர்வாகிகள் சிலர் தெரிவித்ததாவது: “அமைச்சரவையில் வி.சி.க., சேரும்போது திருமாவளவனை அமைச்சராக்க வேண்டும் என பலர் விரும்பினர். ஆனால் அவர் வன்னி அரசை பரிந்துரைத்தார். இது பலருக்கு பிடிக்கவில்லை” என்றனர். இதனால் சிலர் தி.மு.க.,வில் இணையும் முடிவில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க திருமாவளவன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆளூர் ஷா நவாஸுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கேட்டு த.வெ.க.,வுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் இரு மாநகர மேயர் பதவிகள் மற்றும் நகராட்சித் தலைவர் பதவிகளை வழங்க உறுதியளித்தும் சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.
வி.சி.க.,வில் ஏற்பட்டுள்ள இந்த உடைவு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவனின் சமாதான முயற்சிகள் வெற்றி பெறுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: விசிக கனவு நினைவாச்சு..! அமைச்சரவையில் பங்கு... முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய திருமா.!