அழிவுப் பாதையில் ஆவின் நிறுவனம்..? பாதுகாக்குமா தமிழக அரசு.? வேல்முருகன் ஆதங்கம்.!
ஆவின் நிறுவனத்தை தமிழக அரசு காக்குமா என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
பால் உற்பத்தியாளர் பரிதவிப்பது ஏன்? ஆவின் நிறுவனம் அழிவின் பாதையில் செல்கிறதா? என்றும் தமிழ்நாடு அரசு தீர்வு காணுமா? எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். பால் உற்பத்தியாளர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, ஆவினுக்கான பால் கொள்முதல் தொகையை லிட்டருக்கு ரூ.38-லிருந்து ரூ.41 ஆக உயர்த்தியுள்ள தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை வரவேற்பதாக கூறினார்.
அதேவேளையில், உற்பத்தியாளர்களின் தற்போதைய உற்பத்திச் செலவுக்கும் சந்தை நிலவரத்திற்கும் இந்த உயர்வு போதுமானதா? என்ற கேள்வியும் எழுகிறது என்றார். தனியார் நிறுவனங்கள் அதிக விலை வழங்கும் நிலையில், ஆவினை நம்பிப் பால் வழங்கும் உற்பத்தியாளருக்கு அதற்குக் குறைவான தொகைக் கிடைத்தால், அவர்கள் வேறு சந்தையை நாடுவது இயல்பானதே.
எனவே, ஆவினிலும் லிட்டருக்கு ரூ.50 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்பது வெறும் கூடுதல் வருமானத்திற்கான கோரிக்கை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் பால் தேவையை எதிர்காலத்திலும் காப்பதற்கான கோரிக்கை என கூறினார். கால்நடை தீவனம், பராமரிப்பு, மருத்துவம், மருந்துகள் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தியாளருக்கு உரிய வருவாய் கிடைத்தால்தான் கால்நடை வளர்ப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியும். அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே ஆவினுக்குத் தேவையான பால் வரத்தும் நிலையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அனாமத்தாய் போன தமிழர்கள் உயிர்..! நீதி கேட்டால் ஆணவப் பேச்சு..! கர்நாடக முதல்வரை பந்தாடிய வேல்முருகன்.!!
இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், இன்று பால் உற்பத்தியாளருக்கு கிடைக்கும் நிவாரணம் நாளைய நிலையான பால் உற்பத்தியாக மாறும் என்றும் எதிர்கால பால் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முடியும் எனவும் அதைவிட முக்கியமாக, இத்தொழிலில் அடுத்த தலைமுறையினரும் நம்பிக்கையுடன் ஈடுபடுவதற்கான சூழல் உருவாகும் என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆவினை வலுவான கூட்டுறவு நிறுவனமாக நிலைநிறுத்த வேண்டுமெனில், அதன் அடித்தளமாக இருக்கும் பால் உற்பத்தியாளரின் வாழ்வாதாரத்தையும் கால்நடைகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: வட மாநில நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் வேலைகளை தாரை வார்ப்பதா.? வேல்முருகன் ஆவேசம்.!!