×
 

150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி! 'வெற்றி 150' திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் ஆனந்த் அறிவிப்பு!

வெற்றி 150 திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு 25 நாள் கூடுதல் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான காரசார விவாதம் நடைபெற்று வரும் நிலையில், கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் 'வெற்றி 150' என்ற புதிய திட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பங்களுக்குக் கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த் மாமன்றத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பேரவையில் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், உச்ச வேளாண் பணிகள் நடைபெறும் 60 நாட்கள் 'விபிஜி ராம்ஜி' (VB-GRAM G) திட்டம் செயல்படாது எனக் கூறப்பட்டுள்ளதால், அந்தக் காலகட்டத்திலும் விவசாயத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்குத் துறைச் சார்ந்த விளக்கமளித்துப் பேசிய அமைச்சர் ஆனந்த், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டுள்ள 'வளர்ச்சியடைந்த இந்தியா - கிராம வேலை மற்றும் வாழ்வாதாரத் திட்டம் 2025' (VB-GRAM G 2025) கீழ், வேலைநாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விவசாயப் பணிகள் பாதிப்படையாமல் இருக்க, ஆண்டிற்கு அதிகபட்சமாக 60 நாட்களை உச்ச வேளாண் பருவ காலமாக அரசு அறிவிக்கும் என்றும், அந்த நாட்களில் ஊரக வேலைகள் நிறுத்தப்பட்டுத் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: "அத்தை சீர்.. பாட்டி சீர் நாங்கதானே குடுக்கணும்"..! வேளாண் பட்ஜெட்... சௌமியா அன்புமணி விமர்சனம்.!!

இத்திட்டத்திற்காக மத்திய அரசு தனது 60 சதவீத நிதிப் பங்களிப்பாக ரூ.7,586 கோடியை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி மாநில அரசின் 40 சதவீத பங்களிப்பான ரூ.5,057 கோடியை அரசு உடனடியாக விடுவித்து, மொத்தம் ரூ.12,643 கோடி நிதியைக் கிராமப்புற மேம்பாட்டிற்காக உறுதி செய்துள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  

விவாதத்தின் போது குறுக்கிட்ட மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா, 'இது மத்திய அரசின் விபிஜி ராம்ஜி திட்டமா அல்லது தமிழக அரசு கொண்டுவரும் புதிய திட்டமா?' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர், 125 நாட்கள் வேலையை நிறைவு செய்யும் நலிவடைந்த மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்குத் தமிழக அரசின் 'வெற்றி 150' திட்டத்தின் கீழ் கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டு, மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றார். இதற்காகத் தனியாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், என்ன பணிகளை மேற்கொள்வது என்பதைத் தமிழக உள்ளாட்சி நிர்வாகமே தீர்மானிக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பட்ஜெட் விவாதம்..! தவெக அரசை சீண்டிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்... பேரவையில் காரசார விவாதம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share