×
 

அரசு ஊழியர்களின் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

அரசு ஊழியர்களின் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு மட்டுமே என்று  ஜாக்டோ ஜியோ சார்பில்  சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் பணியாளர் அமைப்புகளின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் பிரம்மாண்டமான ‘நன்றி அறிவிப்பு மாநாடு’ நேற்று (பிப்ரவரி 8) நடைபெற்றது. 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' (TAPS) அறிவித்து, அரசு ஊழியர்களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் திரண்டு வந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழாவில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "நன்றி சொல்லி நமக்கான உறவைத் தூரமாக்கி விடாதீர்கள். உங்களின் வியர்வைத் துளிகள் மதிக்கப்பட வேண்டும், கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன," எனத் தனது உரையைத் தொடங்கினார்.

திராவிட மாடல் அரசு என்பது அரசு ஊழியர்களின் அரசு என்று குறிப்பிட்ட முதல்வர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களுக்காகச் செய்யப்பட்டச் சீர்திருத்தங்களை (குடும்பப் பாதுகாப்பு நிதி, கருணை அடிப்படைப் பணி, விடுப்பு ஒப்படைப்பு, மருத்துவக் காப்பீடு போன்றவை) ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.

இதையும் படிங்க: “திமுக ஒரு நிர்வாகத் திறனற்ற அரசு!” திருச்சியில் எடப்பாடி பழனிசாமி சரமாரிபுகார்!

தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் ஆசிரியர்கள்: இந்தியாவிலேயே பள்ளிக் கல்வியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதற்குக் காரணம் ஆசிரியர்களின் தொண்டுதான் என்று பாராட்டிய அவர், திராவிட மாடல் அரசின் முத்திரை திட்டங்களான காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தது அரசு ஊழியர்களே என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) சிறப்புகளை முதல்வர் விளக்கினார். இத்திட்டத்தின் மூலம் 6,75,000 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்குக் கடைசியாகப் பெற்ற மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியம் உறுதி. ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். ஓய்வூதியதாரர் மறைந்தால், அவரது குடும்பத்திற்கு 60% குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.  ஓய்வு பெறும்போது அல்லது பணியிடை மரணமடையும் போது வழங்கப்படும் பணிக்கொடை 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓய்வூதியமின்றிப் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் இனி ‘உரிமைத் தொகை’ வழங்கப்படும்.

மத்திய அரசு வரிப்பகிர்வைக் குறைத்து, நிதி நெருக்கடியைச் செயற்கையாக உருவாக்கிய நிலையிலும், அரசு ஊழியர்களுக்காக ஆண்டுதோறும் 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவினத்தையும், 13 ஆயிரம் கோடி ரூபாய் ஓய்வூதிய நிதியப் பங்களிப்பையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதல்வர் உறுதி அளித்தார்.

அரசு ஊழியர்களின் உரிமையைப் பறித்தது அதிமுக ஆட்சிதான். உங்களை இரத்தக்கண்ணீர் வடிக்க வைத்த கடையல்லாத அரசு அது. ஆனால் இது அனைவரையும் அரவணைக்கும் திராவிட மாடல் அரசு. வரும் தேர்தலிலும், திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் உங்களது கனவுகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும்," என அவர் முழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின் முடிவில், அரசு ஊழியர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்குத் தீர்வு கண்ட முதல்வருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: “தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்குக!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share