இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லி பயணத்தில் உள்ள நிலையில், இன்றும் அவரை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதி தரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு முக்கிய கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, மத்திய அரசின் திட்டங்களின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி, பிஎம்ஷ்ரீ உள்ளிட்ட திட்டங்களுக்கான நிலுவை தொகைகள், மேலும் கர்நாடக அரசு முன்னெடுத்து வரும் மேகதாது அணை திட்டம் தொடர்பான தமிழகத்தின் எதிர்ப்புகள் ஆகியவை குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. அதேபோல், விவசாயம், நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சர்களையும் முதலமைச்சர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வழக்கமாக புதிய முதலமைச்சர்கள் மத்திய அரசுடன் இணக்கமான நிர்வாக உறவை ஏற்படுத்தும் நோக்கில் பிரதமரை சந்தித்து மாநில கோரிக்கைகளை முன்வைப்பது அரசியல் நடைமுறையாக இருந்து வருகிறது. மேலும், தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்த முதலமைச்சர் விஜய், தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில் முதல்முறையாக நேரில் சந்திப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!
தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர், அமைச்சர்கள் என யார் சென்றாலும் பிரதமர் மோடியுடன் சேர்த்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திப்பது வழக்கமானது. அந்த வகையில் நேற்றே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க விஜய் தரப்பில் இருந்து நேரம் கோரப்பட்டிருக்கிறது. ஆனால் நேற்று நேரம் மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில். சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று வெளியான தகவல் தவறானது. ஏனெனில், சந்திப்பிற்கான நேரம் இன்னும் ஒதுக்கப்படவே இல்லை. நேரம் ஒதுக்கப்படாத போது அது எப்படி ரத்தாகும்? என்று தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் இன்று சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், முதல்வர் விஜய், அமித் ஷா இடையேயான சந்திப்பு இன்றும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே உள்துறை அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசரப் பயணமாக குஜராத் செல்ல உள்ளார். இதன் காரணமாக, நாளையும் முதல்வர் விஜய்யைச் சந்திக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எந்த மேதை குடுத்த ஐடியா தெரில… பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்.. சாடிய O.S. மணியன்..!!