×
 

கோயிலில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணமா? தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக அதனை வைப்பதற்கே ரூ 5 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்வதைத் தடுக்கும் நோக்கில், செல்போன்களைப் பாதுகாப்பகத்தில் வைப்பதற்குத் தலா ரூ.5 கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கும், பக்தர்கள் மீது விதிக்கப்படும் தொடர் கெடுபிடிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்பதற்காக, அதனை வைப்பதற்கே ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

ஏற்கனவே கோயில்களில் இறைவனைத் தரிசிப்பதற்காக நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், குடும்பத்தோடு வரும் ஏழை எளிய பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காகவும் தனியாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: 3 தமிழர்கள் படுகொலை உறுதியாகியும் முதல்வர் எங்கே? தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி!

தொடர்ந்து தவெக அரசை விமர்சித்துப் பேசிய அவர், இறைவனைத் தரிசிக்கச் செல்லும் ஆன்மிகப் பயணமே பக்தர்களுக்கு ஒரு பெரும் சவாலான அனுபவமாக மாறிவிடக் கூடாது. பக்தர்கள் அனைவரும் எவ்வித மன உளைச்சலுமின்றி மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்வதே ஓர் அரசின் தலையாய கடமையாகும். 

ஆனால், தற்போதைய தவெக அரசு திருக்கோயில்களிலும் பக்தர்களிடமும் விதித்து வரும் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணங்கள் அனைத்தும் இந்து மதத்தையும், பக்தர்களின் மத உணர்வுகளையும் ஆழமாகப் பாதிக்கும் நடவடிக்கைகளாகவே உள்ளன. இது பக்தர்கள் மீது தொடுக்கப்படும் மறைமுக மனத் தாக்குதலாகும் என்று ஆவேசமாகச் சாடியுள்ளார்.

மேலும், பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்று, இறைவனை மனநிறைவுடன் தரிசித்து, நமது பாரம்பரியக் கலைச் சிற்பங்களை ரசித்து, கோயில் பிரசாதத்தைப் பெற்று மகிழ்ச்சியாக வீடு திரும்பும் சுமூகமான சூழலை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். 

கோயில் என்பது ஆன்மிக அமைதியும் மன நிம்மதியும் தரும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டுப்பாடுகளும் சிரமங்களும் நிறைந்த சோதனைக் களமாக மாறிவிடக் கூடாது என்றும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.


 

இதையும் படிங்க: பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share