×
 

#BREAKING: அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? நெல்லையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், நெல்லையில் இன்று (பிப்ரவரி 8, 2026) நடத்தியுள்ள ரகசிய ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பும் வகையில், நெல்லை மண்ணில் இன்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நற்பணி மன்றத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அண்ணாமலை தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகிய நிலையில், அவரது ஆதரவாளர்களின் இந்த நகர்வு ‘புதிய கட்சி’ தொடங்குவதற்கான அச்சாரமா என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது.

அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது அதிமுக - பாஜக இடையே மோதல் உச்சமடைந்ததால், 2024 தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. ஆனால், 2026 தேர்தலைக் கருத்தில்கொண்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனைப்படி, அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அண்ணாமலைக்கு நீண்ட நாட்களாகப் பெரிய பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்ததால் அவரது ஆதரவாளர்கள் மனச்சோர்வில் இருந்தனர்.  கடந்த சில நாட்களுக்கு முன் 6 மாவட்டங்களுக்கானத் தேர்தல் பொறுப்பாளர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. ஆனால், "தந்தையின் உடல்நலனைக் கவனித்துக்கொள்ள வேண்டும்" எனக் கூறி அந்தப் பதவியை அண்ணாமலை உதறினார்.

இதையும் படிங்க: அரசு மருத்துவர்கள் குரலை நசுக்கும் ஸ்டாலின்..! அரசியல் நாடகம் முடிஞ்சுது... அண்ணாமலை தாக்கு..!

அண்ணாமலை பதவியை மறுத்த அடுத்தச் சில மணி நேரங்களிலேயே, கடந்த 6 மாதங்களாகக் கிடப்பில் இருந்த 'அண்ணாமலை நற்பணி மன்றம்' மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள மன்றத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று தமிழகம் முழுவதிலிருந்தும் வந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலை எந்த முடிவெடுத்தாலும் அதற்குத் தோள் கொடுக்கத் தயார் என ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். பாஜக மேலிடம் அண்ணாமலையைப் புறக்கணிப்பதாகக் கருதும் ஆதரவாளர்கள், அவரைத் தனிக்கட்சித் தொடங்க வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது.

தற்போதைய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த ஊரான நெல்லையிலேயே, அவருக்கு எதிராக அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒன்று திரண்டுள்ளது தமிழக பாஜக-வில் பெரும் பிளவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அண்ணாமலை நற்பணி மன்றத்தின் இந்த அதிரடி ஆலோசனைக் கூட்டம், தமிழகத்தின் திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தியாக உருவெடுக்குமா அல்லது பாஜக மேலிடத்தை அச்சுறுத்தும் ஒரு அழுத்தக் குழுவாகச் செயல்படுமா என்பதை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.


 

இதையும் படிங்க: விஜய்யை இனிமேல்தான் விமர்சிப்பேன்! அண்ணாமலை எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share