என்.டி.ஏ-வை நேரில் ஆய்வு செய்வோம்! தேசிய தேர்வுகள் முகமை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்!
தேசிய தேர்வுகள் முகமை உண்மையில் செயல்படுகிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக நீட் தேர்வு சீர்திருத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்வுகள் முகமை உண்மையில் முழுமையாக இயங்குகிறதா என்பதை உறுதிசெய்ய அதன் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பல்வேறு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும், தேர்வு நடைமுறைகளை நவீன முறையில் சீரமைத்துக் கணினி வழியிலான டிஜிட்டல் தேர்வுகளாக நடத்த உத்தரவிடக் கோரியும் அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கவும் நடைமுறைகளை மேம்படுத்தவும் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் தொய்வு நிலவுவதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்திருந்தது.
இதையும் படிங்க: நவோதயா பள்ளிகளுக்கு 3 மாதங்களில் இடம் தேர்வு செய்க! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!
இன்றைய விசாரணையின் தொடக்கத்தில் நீதிபதிகள், தேர்வு நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பணிகளில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன? அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன? என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். இதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா விளக்கமளிக்கையில், தேசிய தேர்வுகள் முகமைக்குத் தனியாக அலுவலகம் அமைக்கப்பட்டுவிட்டது.
தேர்வு நடைமுறைகளை முழுமையாகச் சீரமைப்பதற்காக இன்போசிஸ் நந்தன் நிலேகனி தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட நிபுணர் குழு விரிவான ஆலோசனைகளை நடத்தி வருகிறது; இக்குழு தனது இறுதிப் பரிந்துரை அறிக்கையை நடப்பு செப்டம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பித்துவிடும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் விளக்கத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள் மிகக் காட்டமான கருத்துகளைப் பதிவு செய்தனர். தேசிய தேர்வுகள் முகமைக்குத் தனி அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அந்த அமைப்பு உண்மையில் களத்தில் உள்ளதா? அது முறையாகச் செயல்படுகிறதா, இல்லையா? மற்றும் அங்குப் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பன உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நாங்களே நேரில் சென்று நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்வோம்.
தேசிய தேர்வுகள் முகமைக்குத் தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு தேர்வுகளை நடத்தாமல், நிரந்தரப் பணியாளர்கள், சிறப்புத் திறன் வாய்ந்த வல்லுநர்கள், நவீன உள்கட்டமைப்பு வசதிகள், பிற அரசு நிறுவனங்களுடனான முறையான ஒருங்கிணைப்பு மற்றும் என்.டி.ஏ அமைப்பிற்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவுறுத்தினர்.
மேலும், நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் வெறும் காகித அளவிலான அறிக்கைகளாக மட்டுமே நின்றுவிடக் கூடாது என்றும், அவற்றை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த அமர்வு, இந்தச் சீர்திருத்தக் குழுவுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் மத்திய அரசின் இணைச் செயலாளர், குழுவின் செயல்பாடுகள் மற்றும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த விரிவான பிரமாணப் பத்திரத்தை 2 வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோன்று, தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த பிரமாணப் பத்திர விவரங்களை என்.டி.ஏ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும். எழுத்துப்பூர்வத் தேர்வுகளில் இருந்து டிஜிட்டல் தேர்வுகளுக்கு மாறுவது படிப்படியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமி ஹாசினி கொலை சம்பவம்... தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு.!!