×
 

கல்குவாரியில் கிடந்த பெண் சடலம்... விசாரணையில் வெளியான ‘திடுக்கிடும்’ உண்மை...!

மாமியாரைக் கொலை செய்து 25 சவரன் நகைகளைத் திருடியவர் சிக்கியது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

வாணியம்பாடி அருகே கல்குவாரியில் பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், அவரது மகளின் காதல் கணவனே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மாமியாரைக் கொலை செய்து 25 சவரன் நகைகளைத் திருடியவர் சிக்கியது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் தெற்கு பாரத் நகர் பகுதியில் செயல்படாமல் இருந்த கல்குவாரியில் பெண்ணின் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: தாயகம் திரும்பிய திருமங்கை ஆழ்வார் சிலை! இங்கிலாந்தில் இருந்து மீட்ட சிலையை முதல்வர் விஜய் பார்வையிட்டார்!

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷயா அனில் வாகரே சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 52 வயதான சசிகலா என்பதும், அவரது கணவர் அசோகன் என்பதும் தெரியவந்தது. இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

24 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்துடன் சசிகலா காணாமல் போனதாக அவரது கணவர் அசோகன், பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சசிகலாவின் மகள் உமா மகேஸ்வரி, அஸ்லம் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

அஸ்லமுக்கு கடன் பிரச்சினை இருந்ததாகவும், அந்தக் கடனை அடைப்பதற்காக தனது மாமியார் சசிகலாவிடம் இருந்த தங்க நகைகளை அவர் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சசிகலா நகைகளை கொடுக்க மறுத்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சசிகலாவின் கழுத்தை நெரித்து அஸ்லம் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தனது நண்பர்களின் உதவியுடன் ஆம்புலன்ஸில் சசிகலாவின் உடலை எடுத்துச் சென்று, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள செயல்படாத கல்குவாரியில் கல்லைக் கட்டி வீசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அஸ்லமை கைது செய்த போலீசார், அவருக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பூபாலன் மற்றும் அவரது நண்பர் நவீன் ஆகியோரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை வாணியம்பாடியில் உள்ள செயல்படாத கல்குவாரிக்கு அழைத்துச் சென்று, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

நகை மற்றும் பணத்துக்காக மாமியாரையே அவரது மகளின் காதல் கணவன் கொலை செய்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓட்டு வாங்குவது காய்கறி வியாபாரமா.? காலம் மாறிப்போச்சு.. விளையாட்டே என் மதம்... பேரவையில் ஆதவ் அதிரடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share