தேனி காவல் நிலையம் அருகே அமைந்துள்ள சமதர்மபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதி 24 மணி நேரமும் மக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படும் பரபரப்பான பகுதியாகும்.
அங்கு ராதா என்ற 60 வயது மூதாட்டி, சாலையோரத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் எப்போதும் நகை அணிந்து இருப்பார் என்றும், மேலும் ஒரு சொத்து வாங்குவதற்காக வீட்டில் பணம் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த ராதாவை கழுத்தில் கயிற்றால் நெரித்தும், பின்னர் அங்கிருந்த கூர்மையான ஆயுதத்தால் கடுமையாக தாக்கியும் கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் அதிர்ச்சி... சக நோயாளி தாக்கி கொலை..! அதிர்ச்சி..!!
மேலும், வீட்டில் வைத்திருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீண் கௌதம் சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கிணற்றில் மிதந்த 4 சடலங்கள்... தாய், குழந்தைகள் உடலில் இருந்த மர்மம்... கொலையா? தற்கொலையா?