விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட இரு எம்எல்ஏக்களுக்கு முக்கிய கட்சிப் பதவிகளை வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட தற்போதைய எம்எல்ஏக்களான எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோருக்கு கட்சியில் உயர் பொறுப்புகளை திருமாவளவன் அறிவித்துள்ளார். எஸ்.எஸ்.பாலாஜிக்கு விசிகவின் மாநில பொருளாளர் பதவியும், ஆளூர் ஷாநவாஸுக்கு மாநில முதன்மைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
விசிகவுக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் இந்த இரு எம்எல்ஏக்களும் இடம் பெறாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேச்சாக இருந்தது. மூன்றாவது எம்எல்ஏ பாபு உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், கட்சிக்குள் கோஷ்டி பூசல் மற்றும் அதிருப்தி அதிகரித்தது. சில எம்எல்ஏக்கள் திமுகவுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும், இது சீட் மறுப்புக்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: அண்ணன் திருமாவளவன் கூட திமுகவில் இருப்பதால் ... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தவெக தலைமை நிர்வாகி...!

இந்த சூழலில் திருமாவளவன் மீண்டும் மீண்டும் “எந்த உள்நோக்கமும் இல்லை” என்று விளக்கம் அளித்து வந்தார். ஆனால் அதிருப்தியை சமாளிக்கும் வகையில் இப்போது இந்த இரு எம்எல்ஏக்களுக்கும் முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார். இந்த நடவடிக்கை கட்சியினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கட்சி வட்டாரங்கள் கூறுகையில், “சீட் மறுக்கப்பட்டாலும் அவர்களின் அனுபவத்தையும் திறமையையும் கட்சி பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. இது கோஷ்டி பூசலை தணிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது” என்றனர்.
இந்த அறிவிப்பு விசிகவுக்குள் நிலவும் உள் முரண்பாடுகளை சமாளிக்க திருமாவளவன் எடுத்துள்ள உத்தியாக அரசியல் அவதானிகள் மதிப்பிடுகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் இந்த இரு தலைவர்களும் கட்சிக்காக தீவிரமாக பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசிக தலைமையின் இந்த நகர்வு கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கர்... தேர்தல் பரப்புரையில் டென்ஷன் ஆன திருமாவளவன்...!