தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (ஜூலை 13) காலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இந்த கலந்தாய்வு தொடங்கியுள்ளதால், உயர்கல்வி சேர்க்கை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இன்று தொடங்கியுள்ள முதல் கட்ட கலந்தாய்வில், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்ற மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பொறியியல் கல்லூரிகள் மற்றும் படிப்புகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்யலாம். மாணவர்கள் பதிவு செய்யும் விருப்பங்களின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட இடஒதுக்கீட்டு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி காலை 7 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் இன்று சொந்த தொகுதிக்கு விஜயம்!!! பெரம்பூருக்கு அதிரடி விசிட்!! மக்களிடம் நேரில் மனு பெறுகிறார்!

இந்த ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் ஏற்கனவே வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தற்போது கலந்தாய்வு பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.
ஜூலை 13 முதல் ஜூலை 17 வரை மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசுப் பள்ளி 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 20-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது விருப்பமான கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்யும் முன், கடந்த ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண்கள், கல்லூரியின் தரவரிசை, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் படிப்பின் எதிர்காலம் போன்ற அம்சங்களை கவனமாக ஆய்வு செய்து தேர்வு செய்யுமாறு கல்வித்துறை வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளன.
தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேரவுள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக இந்த கலந்தாய்வு கருதப்படுவதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த சேர்க்கை நடைமுறையை கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு! ரூ.100-ஐ தொட்டது டீசல்! விடிந்ததும் விடியாததுமாய் வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி!