அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மூன்று நாட்களுக்குள் வெடித்து சிதறக்கூடும் என்று எச்சரித்துள்ளார். அமைதி ஒப்பந்தத்தை ஏற்க அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிட்டுள்ள நிலையில், இந்தப் புதிய எச்சரிக்கை மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
நிருபர்களிடம் பேசிய டிரம்ப், “ஈரானில் எண்ணெய் குழாய்களில் இருந்து எண்ணெயை கொள்கலன்கள் அல்லது கப்பல்களில் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு காரணத்தால் அந்தக் குழாய் மூடப்பட்டால், அது உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறும். இது திடீர் நிகழ்வு. அவர்கள் கூறுகிறார்கள், இதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “அது வெடித்து சிதறும்போது என்ன நடந்தாலும் சரி, அதை முன்பு போல ஒருபோதும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. இது மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஈரான் தலைமை என்னை அணுகலாம். போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் எங்களிடம் வரலாம் அல்லது அழைக்கலாம். தொலைபேசி வசதி உள்ளது, எங்களிடம் நல்ல பாதுகாப்பான இணைப்பு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்!! அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்!!

அமெரிக்காவின் துறைமுக முற்றுகை காரணமாக ஈரான் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் எண்ணெய் குழாய்களில் அழுத்தம் அதிகரித்து, இயந்திர ரீதியாகவும் பூமிக்குள் உள்ள இயற்கை அழுத்தத்தாலும் வெடிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக டிரம்ப் விளக்கினார். இந்த வெடிப்பு ஏற்பட்டால் ஈரானின் எண்ணெய் உற்பத்தித் திறன் பாதியாகக் குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தொடரும் நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தி முடக்கம் உலக அளவில் எரிசக்தி விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. டிரம்ப்பின் இந்த எச்சரிக்கை, ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற செய்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு நிலைமை மிகவும் எரியக்கூடிய சூழலில் உள்ளது. ஈரான் இந்த எச்சரிக்கைக்கு எப்படி பதிலளிக்கும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: லெபனானை தாக்கிய இஸ்ரேல்!! நீளும் போர் பதற்றம்! ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்!!