தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரும், பிரபல நடிகருமான விஜய், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் தற்காலிக விலக்கு கோரியுள்ளார். தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் மற்றும் கட்சி நிர்வாகப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லி சென்று மீண்டும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராவது சாத்தியமில்லை என்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) விசாரித்து வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் விஜய் இரண்டு முறை டெல்லி சென்று நேரில் ஆஜராகி, விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது, மார்ச் 10-ஆம் தேதி (நேற்று) மீண்டும் டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், நேரில் ஆஜராவதற்கு குறைந்தது 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என விஜய் தரப்பிலிருந்து சிபிஐக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கை அனுப்பப்பட்டது. மேலும், சென்னையிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இதையும் படிங்க: விஜய்யின் மகளிர் தின அறிவிப்பு! பெண்களுக்கு மாதம் ₹2500, ஆண்டுக்கு ₹15,000 தவெக-வின் மெகா தேர்தல் வாக்குறுதிகள்!
இந்தக் கோரிக்கையை சிபிஐ ஏற்கவில்லை. அதற்குப் பதிலாக, 5 நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்து, வரும் மார்ச் 15-ஆம் தேதி டெல்லியில் ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பியுள்ளது. இதனால், தேர்தல் முடியும் வரை (அல்லது குறைந்தபட்சம் தேர்தல் பிரசார காலம் முழுவதும்) நேரில் ஆஜராவதிலிருந்து முழுமையான விலக்கு அல்லது சம்மனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரி, விஜய் நீதிமன்றத்தை அணுக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கு தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் சிபிஐ விசாரணை தொடர்பான நடவடிக்கைகள் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விஜய் தரப்பு, தேர்தல் பணிகளை முடக்காமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் டெல்லி பயணம் தொடர்ந்து சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறி வருகிறது.
இதற்கிடையே, கரூர் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு முக்கிய நபரான முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அவர் மார்ச் 17-ஆம் தேதி ஆஜராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக மகளிர் தின விழா! நாளை மகளிருக்கான அதிரடி திட்டங்களை அறிவிக்கிறார் விஜய்!