போதையில்லா தமிழகத்தை உருவாக்குவது தனது முதன்மையான இலக்கு என தமிழக முதல்வர் விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதற்காக, 'ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்' போன்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டங்களை தொடங்கி வைத்துள்ளதோடு, போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்க அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
அதனடிப்படையில், மாநிலத்தில் கஞ்சா, குட்கா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் புழக்கத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க சிறப்புப் பணிக்குழுக்கள் (Anti-Drug STF) அமைக்கப்பட்டன.
இதனிடையே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைக் கடத்தி வந்த வழக்கில், அரசியல் கட்சியின் முக்கிய தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓட்டுக்காக மாநில வளர்ச்சியை பலியிடலாமா.? சொல்லுங்க அமைச்சரே..! நயினார் சரமாரி கேள்வி..!!
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமாத்தூர் பகுதியில், மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையின் தனிப்பிரிவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மறித்து சோதனையிட்டதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காசிநாதன் மற்றும் செக்கானூரணியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட 12 கிலோ குட்கா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திமுக, அதிமுக அகம்பாவம் அழிச்சி போச்சி... உச்சக்கட்ட கொக்கரிப்பில் உயர் கல்வித்துறை அமைச்சர்...!