தமிழக அரசியல் களத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் கடந்த சில மாதங்களாகப் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இது குறித்துத் தனது வரலாற்றுப் பின்னணியையும், எதிர்காலத் திட்டத்தையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கோஷத்தை இன்று பலரும் பேசலாம். ஆனால், 1999-ஆம் ஆண்டிலேயே மூப்பனார் அவர்களை மேடையில் வைத்துக்கொண்டு, இந்த ஸ்லோகனை முதன்முதலாகச் சொன்னவனே நான்தான். இது விசிகவின் நீண்டகாலக் கொள்கை என தனது அரசியல் வரலாற்றை நினைவு கூர்ந்தார்.

விசிகவை இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியாக மாற்றியே தீருவோம் என நான் எடுத்த சபதம் இன்று நிறைவேறி இருக்கிறது. ஒரு சிறுத்தையாகப் போராடி இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம்" எனப் பெருமிதம் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசிய அவர், எதிர்காலத்தில் அதிகாரப் பகிர்வையும் எங்களால் நிச்சயம் வென்றெடுக்க முடியும். ஆனால், அதற்கான சரியான காலம் இப்போது இல்லை என்பதை நாங்கள் முதிர்ச்சியுடன் உணர்ந்திருக்கிறோம். தற்போதைய சூழலில் பாசிச சக்திகளை வீழ்த்துவதே எங்களது முதன்மையான இலக்கு எனத் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: “மகளிர் உரிமைத் தொகை வழங்கியது முதலமைச்சரின் ராஜதந்திர நடவடிக்கை!” சிதம்பரத்தில் தொல். திருமாவளவன் புகழாரம்!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிக ஒரு வலுவான அங்கமாக நீடிக்கும் என்பதையும், தங்களுக்குரிய இடத்தைப் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகப் பெறுவோம் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
சமீபத்தில் விசிக நடத்திய மது ஒழிப்பு மாநாடு மற்றும் தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை போன்றவை 'ஆட்சியில் பங்கு' என்ற விவாதத்தை முன்னிறுத்திய நிலையில், திருமாவளவனின் இந்தப் பேச்சு விசிக தொண்டர்களிடையே ஒரு தெளிவான அரசியல் திசையைக் காட்டியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கடும் சாடல்!