தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சினிமாவில் இருந்து முழுமையாக விலகும் முடிவை எடுத்துள்ளார். அரசியலில் முழு நேரம் ஈடுபடும் நோக்கில் இந்த முக்கிய முடிவை அவர் மேற்கொண்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2024 ஏப்ரல் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய விஜய், அப்போது நடித்து வந்த ‘ஜனநாயகன்’ படத்தை தனது கடைசி படமாக அறிவித்திருந்தார். ஆனால், படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் படக்குழுவுக்கு கணிசமான நிதி நஷ்டம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்காது என விஜய் எதிர்பார்த்ததால், நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் மீண்டும் சினிமாவுக்கு திரும்ப திட்டமிட்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தப் பெரும் வெற்றிக்குப் பிறகு அரசியல் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால், சினிமாவில் நடிக்க முடியாது என விஜய் உறுதியாக முடிவு செய்துள்ளார். ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: விஜயை ஏன் தொட்டோம்னு வருத்தப்படுவீங்க!! சொன்னதை செஞ்சு காட்டிய தவெக தலைவர்! சபதம் நினைவிருக்கா?!

தவெக தொண்டர்கள் மத்தியில் இந்த முடிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “எங்கள் தலைவர் இனி முழு நேர அரசியல்வாதியாக மக்கள் பணியில் ஈடுபடப் போகிறார்” என தொண்டர்கள் உற்சாகம் பொங்கக் கூறுகின்றனர். விஜய்யின் இந்த முடிவு தமிழ் சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தாலும், அவரது அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு விஜய் தனது அடுத்தக் கட்ட நகர்வுகளைத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறார். புதிய அரசு அமைக்கும் பணிகள், கட்சி விரிவாக்கம் உள்ளிட்டவற்றில் முழு கவனம் செலுத்த உள்ள அவர், சினிமா உலகுடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துக் கொள்ளும் முடிவை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முடிவு தமிழக அரசியலில் விஜய்யின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இம்மி பிசறாத கணிப்பு!! சொல்லி அடித்த செய்கை!! விஜய் Good Book-கில் இடம்பிடித்தார் ஓய்வு பெற்ற டிஜிபி ரவி!!