தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திருச்சி கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், மீண்டும் சட்டசபைக்குள் வர எந்த தொகுதியை தேர்வு செய்வார் என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த சூழலில், திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க.வின் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால், அந்த தொகுதி அரசியல் ரீதியாக அதிக கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க.ஸ்டாலின் சூசகம்! மீண்டும் சட்டசபை செல்கிறாரா திமுக தலைவர்!

இதற்கிடையில், சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய முதல்வர் விஜய், ஸ்டாலின் சட்டசபையில் இல்லாததை குறிப்பிட்டு விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு தி.மு.க. தரப்பில் கடும் எதிர்வினை எழுந்தது.
மேலும், புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, “ஸ்டாலின் மீண்டும் சட்டசபைக்கு வருவார்; அது விரைவில் நடக்கும்” என்று கூறியிருந்தார். இந்த கருத்து, இடைத்தேர்தலில் ஸ்டாலின் களம் இறங்கும் வாய்ப்பு அதிகம் என்ற அரசியல் ஊகங்களுக்கு வழிவகுத்தது.
ஆனால், இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதனால், அவர் எந்த தொகுதியை தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தி.மு.க.வின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: திமுகவை பலப்படுத்த போராடும் உதயநிதி ஸ்டாலின்! முட்டுக்கட்டை போட்டு குடைச்சல் கொடுக்கும் சீனியர்கள்!