நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி மோட்டார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டவர். சர்வதேச அளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வரும் அவர், ‘அஜித் குமார் ரேசிங்’ என்ற சொந்த அணியையும் உருவாக்கி போட்டிகளில் களமிறங்கி வருகிறார். இந்த நிலையில், ஐரோப்பாவில் நடைபெற்ற பந்தயத்தின்போது அவரது கார் விபத்தில் சிக்கிய சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் லீமேன்ஸ் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் அஜித்தின் அணி பங்கேற்று வருகிறது. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அஜித் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
கட்டுப்பாட்டை இழந்த கார், பந்தயக் களத்தில் இருந்த மற்றொரு காரின் மீது வேகமாக மோதியது. மோதலின் தாக்கத்தில் அஜித்தின் காரின் முன்பகுதி சேதமடைந்ததுடன், சக்கரங்கள் உள்ளிட்ட சில முக்கிய பாகங்களிலும் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பந்தயக் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: செல்லப்பிராணியாக அரிய குரங்கு?! நடிகர் விக்ரம் வீடியோவால் வெடித்த புதிய சர்ச்சை! வனத்துறை விசாரணை!

எனினும், ரேஸ் காரில் பொருத்தப்பட்டிருந்த நவீன பாதுகாப்பு சாதனங்கள் அஜித்துக்கு பெரும் பாதுகாப்பாக அமைந்தன. விபத்து ஏற்பட்ட போதிலும், அவர் காரில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியதாகவும், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் விபத்தில் சிக்கிய தகவல் வெளியானதும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நடிகரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், அவர் பாதுகாப்பாக இருப்பது தொடர்பான தகவல் ரசிகர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது.
மோட்டார் பந்தயத்தில் அஜித் விபத்தை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் இத்தாலி, ஸ்பெயின், மலேசியா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பந்தயங்கள் மற்றும் பயிற்சிகளின்போது அவர் விபத்துகளில் சிக்கியுள்ளார். சில சந்தர்ப்பங்களில் லேசான காயங்களுடனும் அவர் மீண்டுள்ளார்.
மோட்டார் பந்தயம் அதிக ஆபத்துகள் நிறைந்த விளையாட்டாக இருந்தாலும், அதில் தொடர்ந்து ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் அஜித், தொழில்முறை அணியுடன் சர்வதேச போட்டிகளில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்த விபத்திலும் அவர் காயமின்றி தப்பியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கூட்டம்... ‘மீசைய முறுக்கு 2’ நிகழ்ச்சி திடீர் ரத்து! மன்னிப்பு கேட்டார் ஹிப்ஹாப் ஆதி!