தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே இடப் பிரச்சினை காரணமாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர் மற்றும் அவரது தாய் தந்தையர் என 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் வசித்து வருபவர் சுந்தர் (வயது 55). இவர் வீட்டின் எதிர்ப்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 60) இருவருக்கும் கடந்த ஓராண்டுகளாக இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது .

இந்நிலையில் எதிர் வீட்டுக்காரர் ராஜேந்திரனின் மகன் பார்த்திபன் (வயது 31). இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறை காரணமாக பார்த்திபன் சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்து உள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே இடப்பிரச்னை காரணமாக அவருக்கும் எதிர் வீட்டு குடும்பத்தினருடன் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: போலீஸ்னா என்ன இதுவா? லேடி ஏட்டுக்கு அரிவாள் வெட்டு.. கம்பத்தில் பரபரப்பு..!

முதலில் வாக்குவாதமாக ஆரம்பித்த இந்த பிரச்னை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கைகலப்பாக முற்றி உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த பார்த்திபன் எதிர் வீட்டு குடும்பத்தாரை அரிவாளால் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த எதிர் வீட்டுக்காரர் முத்துமாயன் (வயது 70) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். மேலும் சுந்தர் (வயது 55) மற்றும் அவரது மனைவி சுதா (வயது 48 ) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி உள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சுந்தர் (வயது 55) மற்றும் அவரது மனைவி சுதா (வயது 48 ) இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தர் உயிர் இழந்துள்ளார். இதனை அடுத்து இதுகுறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இறந்த இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர் பார்த்திபன் மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன் தாயார் விஜயா ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இடப் பிரச்சினையின் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அக்கவுண்டுல இவ்ளோ பணமா? ஏடிஎம் கார்டை அபேஸ் செய்த திருடன்.. நகைக்கடையில் ஜாலி பர்சேஸ்..!