கடலூர் மாவட்டம், விருத்தாசலம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் காயத்ரி (வயது-19). இவர் சென்னை அருகே நாவலூரில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கி சத்தியபாமா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயோ மெடிக்கல் படித்து வருகிறார். காயத்ரி சொந்த ஊரில் பள்ளியில் படித்த போது உறவு முறை தாய்மாமன் ராஜா என்பவரின் மகன் ரத்தினம் என்பவருடன் பழகி உள்ளார். இருவரும் பள்ளியில் பயிலும் போது சிறுவயதில் காதலித்ததாக கூறப்படுகிறது.
ரத்தினகுமார் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். கல்லூரியில் சேர்ந்த பிறகு ரத்தினகுமார் அடிக்கடி நாவலூர் சென்று காயத்ரியை சந்தித்து விட்டு சென்றுள்ளார். நாட்கள் செல்ல செல்ல காயத்ரி படிப்பில் தீவிரமாக கவனம் செலுத்த துவங்கினார். படிப்பை தொடர்வதற்காக உறவுக்கார தாய் மாமன் பையனுடன் காயத்ரி பழகி வந்ததை நிறுத்திவிட்டார். ரத்தின குமாருடன் பேசுவதை குறைத்துக் கொண்டார். காதலுக்கு மறுப்பு தெரிவித்து படிப்பில் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், ரத்தினகுமாரோ சதா, காயத்ரியை நினைத்துக் கொண்டிருந்தார். தொடர்ச்சியாக காயத்ரிக்கு போன் செய்தார். ரத்தினகுமாரின் ஃபோன் கால்களால் தன்னுடைய படிப்பு பாதிக்கப்படுவதாக நினைத்த காயத்ரி, ஒரு கட்டத்தில் போன் எடுப்பதை தவிர்த்தார். இது, ரத்தினகுமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் மனதில் பலவித காட்சிகள் ஓடின.
கல்லூரிக்கு போனதும் புதிய நண்பர்களுடன் சேர்ந்து விட்டாளா? தன்னை விட்டு விட்டு, வேறு யாருடனாவது பழக ஆரம்பித்து விட்டாளா? என நினைத்துள்ளார். அப்படி என்றால் இத்தனை ஆண்டுகளாய் தன்னை காதலிப்பதாக காயத்ரி சொன்னதெல்லாம் பொய்யா? என மனதுக்குள் குமுற ஆரம்பித்தார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவன் கடத்தல்.. ஓசியில் சூப் கேட்டு தாக்குதல்.. சரித்திர பதிவேடு குற்றவாளி கைது..!

ஏன் போன் எடுக்கவில்லை என ஒருமுறை ரத்தினகுமார் கோபத்துடன் கேட்டபோது, காயத்ரி திரும்ப சத்தம் போட்டுள்ளார். எனக்கு படிக்க நிறைய இருக்கிறது. தயவு செய்து போன் செய்யாதே. என்னிடம் பேசாதே; என்னை பார்க்கவும் வராதே என கோபமாக கூறியுள்ளார். இந்த நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 9 மணிக்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைக்காக வந்த ரத்தினம், வேலை முடிந்ததும் நாவலூர் புறப்பட்டு சென்று உள்ளார். விடுதியில் தங்கி இருந்த காயத்ரிக்கு போன் செய்து உன்னை சந்திக்க நாவலூர் வந்துள்ளேன். சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு சென்று விடுகிறேன் என்று கூறி செல்போனில் அழைத்துள்ளார்.
மாமன் மகன் தானே என்று நம்பி விடுதியை விட்டு வெளியே வந்த காயத்ரி ஓ.எம்.ஆர். சாலையில் நின்றிருந்த ரத்தினத்தை சந்தித்து பேசிக்கொண்டு இருந்துள்ளார்.ஒரு கட்டத்தில் தன்னுடன் காதலை தொடருமாறும் என்னை கைவிட வேண்டாம் என்றும் ரத்தினம் கூறி உள்ளார். அதற்கு காயத்ரி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை காயத்ரி மீது ஊற்றிய ரத்தினம் தன்னிடம் இருந்த சிகரெட் லைட்டர் மூலம் தீ வைத்துள்ளார்.

இதில் தீ மளமளவென பரவியதால் அலறித்துடித்த காயத்ரி மீது அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் காயத்ரி கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி செய்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை குளோபல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 40 சதவீதம் தீ காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் காயத்ரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த ரத்தினத்தை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து தாழம்பூர் போலீசில் ஒப்படைத்தனர். தாழம்பூர் போலீசார் ரத்தினம் மீது கொலை முயற்சி (307-பிரிவில்) வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மெட்ரோவில் வேலை வேணுமா? 20 லட்சம் செலவாகுமே..! நீதிபதி பெயரில் பயிற்சி வக்கீல் மோசடி..!