ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வெள்ளாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. வயது 75. இவரது மனைவி பாக்கியம்மாள் வயது 65. இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவரது மகன் கவிசங்கர் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கவிசங்கர் கடந்த இருநாட்களாக பெற்றோரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். யாரும் போனை எடுக்கவில்லை.
கவிசங்கர் அருகில் இருந்தவர்களை சென்று பார்க்க கூறி உள்ளார். அப்போது ராமசாமி வீட்டுக்கு உள்ளேயும், பாக்கியம்மாள் வீட்டுக்கு வெளியேயும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். பாக்கியம் அணிந்திருந்த தாலிக்கொடி, தங்கவளையல் உள்ளிட்ட 15 பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன. அக்கம்பக்க்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்தில் ஈரோடு எஸ்பி சுஜாதா, பெருந்துறை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

பல்லடம் அருகே தம்பதி மற்றும் அவர்களது மகன் கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்னும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொங்கு பகுதியில் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியாக வசிக்கும் தம்பதிகளை நோட்டமிட்டு சம்பவம் நடக்கிறதா என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலம் பட்டாசு விபத்து.. பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.. நிவாரணத்தை உயர்த்தி வழங்க இபிஎஸ் கோரிக்கை..!

இந்த நிலையில் ஈரோட்டில் விவசாய தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம் தம்பதி படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய ஸ்டாலின் அவர்களே, இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடந்த சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்.

1 மே 2022ல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை.
9 செப்டம்பர் 2023ல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.
29 நவம்பர் 2024ல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.
13 மார்ச் 2025ல் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.
14 ஏப்ரல் 2025ல் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை.

இவற்றை, 'தனிப்பட்ட ஒன்று, இரண்டு விஷயங்கள்' என கூறுவதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரை கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இந்த கொலை, கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கை காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதை பத்தி வாயே திறக்கக்கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட எடப்பாடி..!