பீஹாரில் திருமணமான ஒரு ஆண்டுக்குள், மூன்று மாத கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் இளம் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீஹார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தின் சித்தாவாலியா பகுதியை சேர்ந்த மணீஷ் கன்வாருக்கு, குடியா தேவி என்ற 22 வயது பெண்ணுடன் கடந்த ஆண்டு மே 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு வரதட்சணையாக தங்கச் செயின் மற்றும் புல்லட் மோட்டார் சைக்கிள் கேட்டு, கணவர் வீட்டார் தொடர்ந்து குடியா தேவியை துன்புறுத்தி வந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில் குடியா தேவி தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. கர்ப்பமாக இருந்தபோதிலும் அவர்மீது வரதட்சணை அழுத்தம் குறையவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் கொடுமை காரணமாக இளம் பெண் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: புதிய வரலாறு..! பீகாரின் முதல் பாஜக முதலமைச்சர்..!! சாம்ராட் சவுத்ரி பதவி ஏற்பு..!!

இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு, குடியா தேவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவத்திற்கு பிறகு கணவர், மாமனார் உள்ளிட்ட குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
குடியா தேவியின் பெற்றோர் அளித்த புகாரில், வரதட்சணை கேட்டு தங்கள் மகளை தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாகவும், இறுதியில் கொலை செய்து தற்கொலை போல காட்ட முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து வரதட்சணை கொலை கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தலைமறைவான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பீஹாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், வரதட்சணை கொடுமையால் பெண்கள் இன்னும் பலியாகும் நிலை தொடர்வது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருமணத்தின் முதலாவது ஆண்டு நிறைவுநாளிலேயே கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது!! 1000 ஆண்டுகளுக்கு உத்வேகமாகத் திகழும் - மோடி பெருமிதம்!