இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த 12 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இதற்கு பதிலடியாக நேற்றிரவு ஈரான் ஏவுகணைகளால் கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளத்தை தாக்கியது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக, இஸ்ரேல், ஈரான் நாடுகள் போர் நிறுத்தம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நள்ளிரவில் அறிவிப்பு வெளியிட்டார். 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும். இஸ்ரேலும் ஈரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் என்னிடம் அமைதியை தேடி வந்தன. போரை முடிவுக்கு கொண்டு வரும் இரு நாடுகளின் புத்திசாலித்தனத்துக்கு வாழ்த்துக்கள்.
மத்திய கிழக்கு நாடுகள் ஒருபோதும் அழியாது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மற்றும் உலகை கடவுள் ஆசிர்வதிப்பார் என டிரம்ப் அறிக்கையில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: வேலையை காட்டிய ஈரான்.. போர் நிறுத்தும் அறிவிக்கும் முன் மீண்டும் தாக்குதல்.. பதிலடி கொடுக்குமா இஸ்ரேல்?

ஆனால், டிரம்ப் அறிவிப்பை ஈரான் உடனடியாக நிராகரித்துது. போர் நிறுத்தம் இல்லை; இஸ்ரேல் மீது தாக்குதல் தொடரும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி கூறினார். இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில மணிநேரங்களில் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தெற்கு இஸ்ரேலில் உள்ள (Be'er Sheva) பீர் ஷெவா நகரில் இன்று அதிகாலை ஈரான் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியது.
இந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டவர்கள் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஈரானின் ஆக்ரோஷ தாக்குதலால் இஸ்ரேல் நகரங்களில் பதற்றம் அதிகரித்த நிலையில், அதுபோல, இஸ்ரேலும் தாக்குதல் நடத்துமா? என்ற பரபரப்பு நிலவுகிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப் ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இப்போது முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஈரானின் உச்ச தலைவர் காமெனியின் பதிவு உலக நாடுகளை மீண்டும் கலக்கம் அடைய செய்துள்ளது. ஈரானிய மக்களையும் மற்றும் அவர்களுடைய வரலாறையும் பற்றி அறிந்தவர்களுக்கு, ஈரான் நாடு ஒருபோதும் சரண் அடையாது என்பது தெரியும் என காமேனி அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்களை ஈரான் நடத்திய பின்னர், காமேனியின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கத்தாரை தொடர்ந்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள பகுதியிலும் மர்ம டிரோன்கள் தாக்கியுள்ளன. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது.
இதையும் படிங்க: வான்வெளியை மூடிய வளைகுடா நாடுகள்.. அடுத்தடுத்து ரத்தாகும் விமானங்கள்.. போர் பதற்றத்தால் ஸ்தம்பிக்கும் உலகம்..!