மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் (IRGC) இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான மற்றும் நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஈரானில் இனி நடைபெறும் ஒவ்வொரு 'படுகொலைக்கும்' (Targeted Assassinations) ஈடாக, மத்திய கிழக்கில் உள்ள ஒரு முன்னணி அமெரிக்க நிறுவனம் முற்றிலும் தகர்க்கப்படும் என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் எண்ணெய் கிணறுகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை அழிப்போம் என மிரட்டியதற்குப் பதிலடியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரான் ராணுவம் தனது அறிக்கையில் குறிப்பாக 18 முன்னணி அமெரிக்கத் தொழில் நுட்ப மற்றும் நிதி நிறுவனங்களைப் பட்டியலிட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானவை. கூகுள் (Google), மைக்ரோசாப்ட் (Microsoft), ஆப்பிள் (Apple), மெட்டா (Meta), இன்டெல் (Intel), ஹெச்பி (HP), சிஸ்கோ (Cisco), ஆரக்கிள் (Oracle), ஐபிஎம் (IBM), டெல் (Dell), என்விடியா (Nvidia). டெஸ்லா (Tesla), போயிங் (Boeing), ஜெனரல் எலக்ட்ரிக் (General Electric), ஜேபி மோர்கன் சேஸ் (JPMorgan Chase).

இந்த எச்சரிக்கை ஏப்ரல் 1, புதன்கிழமை இரவு 8 மணி (தெஹ்ரான் நேரம்) முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள அந்தந்த நிறுவனங்களின் அலுவலகங்களை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்துகிறோம் என ஈரான் ராணுவம் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது. ஈரானியத் தலைவர்களின் படுகொலைகளுக்கு இந்த நிறுவனங்கள் உடந்தையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: மத்திய கிழக்கு போரில் 6 இந்தியர்கள் பலி! மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்!
ஏற்கனவே சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், இந்த புதிய எச்சரிக்கை போர் மேகங்களை மேலும் கருமையாக்கியுள்ளது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் கூறப்பட்டாலும், இரு நாடுகளும் மாற்றி மாற்றி வாழ்வாதார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளை அழிப்போம் என மிரட்டுவது உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: மத்திய கிழக்கு போர் எதிரொலி! பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்!