நேபாளத்தின் கோசி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று பெருவெள்ளம், அந்த நாட்டில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெருவெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
நேற்று இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 562 ஆக இருந்த நிலையில், தற்போது அது மேலும் அதிகரித்து 586 ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 600-ஐ நெருங்கியுள்ளது.
அதேபோல், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் சுமார் 2,400 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு நிலவரப்படி சுமார் 2,000 பேர் காணாமல் போயிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2,400 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: உலகையே உலுக்கிய கோரம்... நேபாளம் பெரு வெள்ளத்திற்கு காரணம் இதுவா?... வெளியானது அதிர்ச்சி தகவல்...!!
மேலும், 101 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நான்காவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், திரிசூலி பகுதியில் மட்டும் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் கனமழை பெய்து வருவதால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆற்றிலும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, அந்தப் பகுதியில் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் நிலை என்ன?
இந்தியர்களைப் பொறுத்தவரை, இதுவரை மொத்தம் 320 இந்தியர்கள் காணாமல் போயிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 21 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுதவிர, திரிசூலியில் உள்ள மின் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 63 பணியாளர்கள் சிக்கியிருந்த நிலையில், அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக சுமார் 81 இந்தியர்கள் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, நேபாளப் பகுதியில் சிக்கித் தவித்த 90-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக சீன எல்லையைக் கடந்து நேபாளப் பகுதிக்கு வந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் அடுத்தடுத்து இந்தியா வர இருக்கிறார்கள்.
இவர்கள் மட்டுமின்றி, சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சீனப் பகுதியிலேயே சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை முதலில் நேபாளப் பகுதிக்கு அழைத்து வந்து, பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்கு அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சேலையில் கட்டி... ஹாலிவுட்டையே மிஞ்சிய திகில் சம்பவம்... நேபாளத்தில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் ‘திக் திக்’ பேட்டி...!