பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு சனிக்கிழமை (ஏப்ரல் 18) தங்கள் நாட்டுக்குத் திரும்புகின்றனர்.
இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் இடையிலான முதல் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஈரான் சார்பில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவும், அமெரிக்கா சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது அமலில் உள்ள இரு வார போர்நிறுத்தம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இரண்டாவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க பாகிஸ்தான் முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் ஷரீஃப் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கும், ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ஈரான் சென்ற பாக்., அமைச்சர்! 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தூது!! மேற்காசிய போரை முடித்துவைக்க திட்டம்?!

ஈரானில் வெளியுறவு அமைச்சர் அராக்சி, நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் கால்பாஃப் மற்றும் ராணுவத் தலைவர்களை தளபதி முனீர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் ஷரீஃப் தனது பயணத்தின் இறுதி நாளான இன்று துருக்கியில் இருந்து திரும்புகிறார்.
இந்த பயணங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான்-அமெரிக்கா இடையிலான இரண்டாவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், லெபனான்-இஸ்ரேல் இடையிலான போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாகத் திறந்துள்ளது. இது பிராந்திய பதற்றத்தை ஓரளவு குறைக்கும் என்று கருதப்படுகிறது.
பாகிஸ்தான் தலைவர்களின் இந்த தீவிர இராஜதந்திர முயற்சிகள், உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்?! பாக்., ராணுவ தளபதி அசின் முனீர் கதறல்!